போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு!

போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு!

வானம்பாடி கவிஞர்களில் ஒருவரும் புதுக்கவிதை இயக்க முன்னோடியுமான தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவியரசர் நா. காமராசன் (74) நேற்று (மே24) இரவு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
2006-ல் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதலாமாண்டு படிக்கும் போது அவருடைய `கறுப்பு மலர்கள்’ கவிதைப் புத்தகம்தான் எனக்குப் பாடத்திட்டமாக இருந்தது. அத்தொகுப்பைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆசிரியரிடம் கேட்ட போது `நம் கல்லூரியின் முன்னாள் மாணவரென்றும்,முதுகலைவரை(M.A) இங்குதான் படித்தாரென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றாரென்றும்’கூறினார்.
அதன்பிறகு அவருடைய `சூரியக் காந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ ஆகிய கவிதை புத்தகங்களையும், பெரியாரைப் பற்றி எழுதிய `பெரியார் காவியம்’புத்தகத்தையும் படித்தேன். பெரியார் காவியம் படித்தபோதுதான் அவர் திராவிடக் கொள்கை பற்றாளர் என்றும் தெரிய வந்தது.
ரொம்ப நாளாய் `கனவுகளே ஆயிரம் கனவுகளே' பாடலைக் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார் என நினைத்திருந்தேன். அதன் பிறகு தான் அப்பாடலை எழுதியவர் நா. காமராசன் என அறிந்தேன்.பின்னர் அவருடைய பாடல்களைத் தேடிய போது `போய் வா நதி அலையே’ பாடலையும் இவர்தான் எழுதியுள்ளாரெனத் தெரிந்தது. அப்பாடலில் `நுரைப் பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்’ என்றும் `மழைக் கூந்தல் ஓரம் இளைப்பார வேண்டும்’ என்றும் புதுமையாய் எழுதியிருப்பார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை `நூற்றியொன்றாவது பல்லவியில்தான் எல்லாரும் ஓகே ஆவார்கள். நீ மட்டும்தான் ஒரே பல்லவியில் ஓகே ஆகியுள்ளாய் என்றும், கண்ணதாசன் எளிமையாய் எழுதுவார் நீ புதுமையாய் எழுதுகிறாய் என்றும் இவரைப் புகழ்ந்துள்ளார். கண்ணதாசனைப் போல இவரும் மதுவில் மூழ்கி முத்தெடுக்க நினைத்தார். மூழ்கியதுதான் மிச்சம் முத்தெடுக்கவில்லை.
இவரின் கறுப்பு மலர்கள் என்ற நூலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியவற்றையும் நா.காமராசன் பெற்றுள்ளார்.`கறுப்பு மலர்கள்’ உள்பட 38 நூல்களையும், பல பாடல்களையும் எழுதியுள்ள கவியரசர் நா.காமராசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றிக் காலாமாகியுள்ளார். நா.காமராசன் மறைவுக்குத் திரையுலகத்தினரும், கவிஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
-தினேஷ்
போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு! போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.