அசாம் முதல்வருக்கு வைகோ கடிதம்!

அசாம் முதல்வருக்கு வைகோ கடிதம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டத்தின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அசாம் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டன், அசாம் மாநில குற்றப் புலனாய்வுத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். வங்காள மொழி பேசும் நிப்பஸ் அமைப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சிறையிலடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஆனால் இன்னும் இவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ராஜமார்த்தாண்டத்தின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அசாம் மாநில முதல்வருக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் எழுதியுள்ள கடிதத்தில்,' அசாம்-மேகாலயா தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியான (2006 பிரிவு) டாக்டர் என். இராஜமார்த்தாண்டன், அசாம் மாநில குற்றப் புலனாய்வுத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகின்றார். அசாம் மாநிலத்தின் தேமாஜி மாவட்டம், சிலாபத்தர் நகரத்தில், கடந்த மார்ச் 6 ஆம் நாள் நிகழ்ந்த வன்முறைகள் குறித்துப் புலனாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
அசாமில் நிகில் பாரத் பெங்காலி உத்பஸ்து சமான்னய சமிதி (நிப்பஸ்) என்ற, வங்கதேசத்தில் இருந்து வந்த, வங்க மொழி பேசும் இந்துக்கள் அமைப்பு ஒன்று, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி பேரணியை நடத்தினர், அப்போது, அவர்கள் அசாம் மாணவர் சங்க அலுவலகத்தை தாக்கியுள்ளனர். பிறகு இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிப்பஸ் அமைப்பினர் சில தகவல்களைக் கேட்டு விண்ணப்பித்ததன் அடிப்படையில், டாக்டர் ராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநிலக் காவல்துறைக்கு, இந்தப் போராட்டம் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் சில தகவல்களை அளித்து இருக்கின்றார். இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஏப்ரல் 7 ஆம் நாள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 12 ஆம் நாள் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனக்குத் தெரிந்த அளவில், தமிழகத்தின் பழம்பெருமை மிக்க கோவில் நகரமான மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜமார்த்தாண்டன் ஒரு நேர்மையான அதிகாரி என்பதுடன், 2015, 2016 ஆம் ஆண்டுகளில் சிறப்பாகப் பணி ஆற்றியமைக்காக அரசு விருதும் பெற்றுள்ளார். எனவே அந்த இளம் அதிகாரியின் எதிர்காலத்தைக் கனிவுடன் கருத்தில் கொண்டு, அவரது பணி இடை நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் முதல்வருக்கு வைகோ கடிதம்! அசாம் முதல்வருக்கு வைகோ கடிதம்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.