நெல் ஜெயராமனுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்!

நெல் ஜெயராமனுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்!

மறைந்த விவசாய வித்தகர் நெல் ஜெயராமனுக்கு மத்திய அரசின் பத்ம விருது வழங்கப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நெல் ஜெயராமன் பாரம்பரிய விவசாயத்தின் மீதும் இயற்கை மீதும் பற்றுக்கொண்டவர். 170 நெல் ரகங்களைப் பாதுகாத்து, விளைவித்து தமிழகம் முழுவதும் விதையாக விவசாயிகளிடம் கொண்டு சென்றவர். இவர் ஒரு சாதனையாளர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
நெல் ஜெயராமனுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி கூடிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் அவருக்கு பத்ம விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இக்கூட்டமைப்பின் செயலாளரும், தமிழக கள் இயக்கத்தின் தலைவருமான அறச்சலூர் நல்லசாமி இந்தக் கோரிக்கையை முன்னெடுத்திருக்கிறார்.
அவரிடம் பேசினோம்.
“நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு பேரிழப்பு. இவரது குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய விதைகளைப் பலருக்கும் கொடுத்து விரிவுபடுத்தியதை மக்கள் மறந்துவிட முடியாது.
சினிமாத் துறை , விளையாட்டுத் துறை, மருத்துவத் துறை, சமூகசேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால், மக்கள்தொகையில் 60 சதவிகிதமாக இருக்கக்கூடிய விவசாயிகளின் மீது விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் பார்வை படுவதில்லை. விவசாயத் துறையில் சாதனை புரிந்தவர்கள் எவருமே நாட்டில் இல்லையா? இதை ஒரு விவசாய விரோதப் போக்காகவே கூட்டமைப்பு கருதுகிறது.
170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ராகங்களைப் பாதுகாத்து, பலருக்கும் அதைக் கொடுத்து சாதனை புரிந்தவர் நெல் ஜெயராமன். இவரது சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் இவருக்கு பத்ம விருது வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது கடமையும் கூட. நெல் ஜெயராமனுக்கு இந்த விருது கொடுப்பது, விருதுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். விவசாயத்தையும் விவசாயிகளையும் மத்திய அரசு மதித்து கௌரவித்ததாகவும் இது அமையும்.
வரும் ஆண்டில் நெல் ஜெயராமன் அவர்களுக்கு பத்ம விருது வழங்க தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இதுவே அவரது மறைவுக்கு அரசுகள் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் நல்லசாமி.
நெல் ஜெயராமனுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் வழங்கப்பட்டால், அவரது விவசாய சாதனைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக பரவும். மத்திய அரசின் கவனத்துக்கு தமிழக அரசும், இங்குள்ள பாஜக தலைவர்களும் இதை எடுத்துச் செல்ல வேண்டும்.
செய்வார்களா?
நெல் ஜெயராமனுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்! நெல் ஜெயராமனுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.