திருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த 12 பேர் கைது!


தஞ்சாவூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த 12 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   
தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகே உள்ள வடசேரியில் இன்று(வெள்ளி) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டமிட்டு இருந்தார்.அதன் பின்னர் அவர் திருவாரூர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கும் செல்ல இருந்தார்.
இந்நிலையில் திருமாவளவன் வடசேரி வரக்கூடாது என்று அப்பகுதியைச்  சேர்ந்த 40 க்கும் மேற்பட்டவர்கள்   வடசேரி ரவுண்டானா அருகில் போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை வட்டார போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனிடையே  பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில்  ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கு இருந்த 12 பேரைக்  கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் போது,  வடசேரிக்கு கொடியேற்று விழாவிற்கு வரும் திருமாவளவன் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரிப்பு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே  திருமாவளவனை வடசேரிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் கூறி,  அவரை மன்னார்குடி வழியாக  திருவாரூக்கு திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் வடசேரி கொடியேற்று விழா நடைபெறவில்லை. இந்த சம்பவங்களால் அந்தப் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
திருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த 12 பேர் கைது! திருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த 12 பேர் கைது! Reviewed by நமதூர் செய்திகள் on 03:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.