1987-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார் மரணமடைந்ததை அடுத்து அவருக்குப் பின் யார் முதல்வராவது என்று அதிமுகவில் குழப்பம் நிலவியது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக 10 திமுக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சி சின்களையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.
இதே நிலை தற்போதைய தமிழக அரசியல் களத்திலும் ஏற்பட்டுள்ளது. டிசம்பரி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்தார். சசிகலாவுக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியில் சசிகலாவை பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கின்றனர். சசிகலா சார்பில் முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரினார். எதிர்க்கட்சிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ரகசிய வாக்கெடுப்புக்கு கோரியும் சபாநாயகர் தனபால் அதை மறுத்தார். சட்டப்பேரவை அமளி கண்டது. திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் முறையிட்டார். ஆளுநர் மாளிகை முன் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகமெங்கும் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதே வேளையில் திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில் நம்முன் 1989-ஆம் ஆண்டு கொண்டு வந்ததைப் போன்ற ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்படுமா என்கிற கேள்வி மட்டும் பதிலுக்காக காத்திருக்கிறது.