தாமதிப்பது குதிரை பேரத்துக்கு இடமளிக்கும் : திருமாவளவன்

தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், நிலையான ஆட்சி அமைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் இதில் காலதாமதம் செய்தால் குதிரை பேரங்களுக்கு இடமளிப்பதாக அமைந்துவிடும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் காலதாமதம் செய்வது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு கவர்னர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சில நாட்களில் தொடங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் நியாயத்தை முன்வைத்து வாதாட வேண்டும். ‘நீட்’ நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருக்கிறது. விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கடமைகளை எல்லாம் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டில் இல்லையென்றால் மாபெரும் இழப்பை தமிழகம் சந்திக்க நேரிடும். இது கவர்னருக்குத் தெரியாதது அல்ல. எனவே, அவர் தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்குமாறாக, தாமதம் செய்வது தேவையற்ற குதிரைபேரங்களுக்கு இடமளிப்பதாக அமைந்துவிடும். அப்படியான பேரங்களுக்கு ஊக்கமளிப்பதும், அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்துவதும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பாகிவிடும் என்பதையும் கவர்னரின் மேலான கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்’ என்று கூறியுள்ளார்.
தாமதிப்பது குதிரை பேரத்துக்கு இடமளிக்கும் : திருமாவளவன் தாமதிப்பது குதிரை பேரத்துக்கு இடமளிக்கும் : திருமாவளவன் Reviewed by நமதூர் செய்திகள் on 02:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.