நிகர்நிலை பல்கலைகளின் கல்லா நிரப்பும் நீட்!

நிகர்நிலை பல்கலைகளின் கல்லா நிரப்பும் நீட்!

மிகவும் உன்னதமான நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், தனியாருக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கோடிகளைக் குவிக்கும் வெறிக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.
நீட் தேர்வு 2011ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்டபோது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும்தான் அதன் நோக்கங்கள் என்று கூறப்பட்டது. ஆனால், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை சட்ட விரோதமாக வசூலித்துக்கொண்டிருந்த பணத்தை இப்போது சட்டப்படியாக வசூலிக்க நீட் தேர்வு வகை செய்திருக்கிறது என்று புள்ளி விவரங்களோடு குற்றம்சாட்டுகிறார் அன்புமணி.
இது குறித்து இன்று (ஜூன் 6) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல விஷயங்களை உடைத்திருக்கிறார்.
ஆறு மடங்கு மாணவர்கள்!
“தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 9451 இடங்கள் உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகத் தரவரிசை தயாரிக்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2,504 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், அவ்வகுப்பினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலில் உள்ள 2504 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இம்முறையில் 9451 இடங்களுக்கு அதிகபட்சமாக 10,000 பேர் மட்டும் தான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆனால், நீட் தேர்வு அப்படிப்பட்டதல்ல. நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 1,15,775 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இடங்களை விட 6 மடங்கு மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டிய தேவை என்ன? இதன் பின்னணியில் தான் சதி ஒளிந்திருக்கிறது’’ என்னும் அன்புமணி, அது பற்றியும் விளக்குகிறார்.
நிகர் நிலை பல்கலைக்காகவே நீட்!
“அனைத்து வகை மருத்துவப் படிப்புகளுக்குமான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1.05 லட்சம் இடங்கள் தர வரிசையில் முன்னணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுவிடும்.
இவை தவிர நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 10,000 இடங்களுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவர். இந்த இடங்களை நிரப்பத் தர வரிசையில் முன்னணியில் உள்ள 10,000 பேரை அழைத்தால் அவர்களில் தகுதியுடைய 1000 பேர்கூடச் சேர மாட்டார்கள். காரணம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13,600 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களில் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ரூ.22.50 லட்சமும், குறைந்தபட்சமாக ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் ரூ.18 லட்சமும் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதில் சேர எவரும் முன்வர மாட்டார்கள். இதனால் அந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடம் நிரம்பாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தகுதித் தேர்வு என்ற பெயரில் 6 மடங்கு மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கின்றனர்.
அவகாசம் நீட்டித்த மத்திய அரசு!
இவை உண்மை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களை நிரப்ப மத்திய அரசு மூலம் இரு கட்டக் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்தக் கலந்தாய்வுகளில் 10% மட்டுமே நிரப்பப்பட்டன. அதற்குள் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் முடிந்துவிட்டது. அத்தகைய சூழலில் 90% இடங்களையும் காலியானதாக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வருவாய் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்ட மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகி, கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டித்ததுடன், காலியாக உள்ள 5500 இடங்களை நிரப்ப 1:10 என்ற விகிதத்தில் 55,000 பேரைக் கலந்தாய்வுக்கு அழைக்கவும் அனுமதி பெற்றுத் தந்தது.
பணம் இருந்தால் சீட்!
இதனால் நீட் தேர்வில் 720க்கு 125 மதிப்பெண் பெற்றவர்களுக்குக்கூட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது. 720க்கு 300 மதிப்பெண் பெற்ற பலரிடம் பணம் இல்லாததால், தகுதி இருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனது. அதே நேரத்தில் 125 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவர் தகுதி இல்லாவிட்டாலும் பணம் இருந்ததால் நிகர்நிலை மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. இத்தகைய சூழலில் நீட் தேர்வால் கல்வித் தரம் உயருகிறது; கல்வி வணிகமாவது தடுக்கப்படுகிறது என மத்திய அரசு கூறுவது கேலிக்கூத்தின் உச்சக்கட்டமாகும்.
மருத்துவக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 96 மதிப்பெண், அதாவது 13.89% எடுத்தாலே மருத்துவம் படிக்கத் தகுதி என்று நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்? 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், அது தகுதிக்கான அடையாளம் இல்லை என்று கூறிவிட்டு, 13.89% மதிப்பெண் எடுப்பதுதான் தகுதி என்பது நகைப்புக்குரியதாகும்’’ என்று கூறியுள்ளார் அன்புமணி.
150 மடங்கு அதிகக் கட்டணம்!
மேலும் அவர், “பணம் படைத்தவர்கள் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையை விட 150 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது கொள்ளை அல்லவா? இதுதான் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கும் லட்சணமா? மொத்தத்தில் நீட் தேர்வு தகுதியை உறுதி செய்யும் தேர்வு அல்ல... மாறாக தகுதியற்ற பணம் படைத்தவர்களுக்கு தகுதி வழங்கும் தேர்வு என்பதே உண்மை.
நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவப்படிப்புக்கான சட்டவிரோத நன்கொடையாக ரூ.20 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசூலித்தன. நீட் தேர்வு வந்தவுடன் அந்த நிலை மாறவில்லை. மாறாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வீதம், மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் ஒன்றரை கோடி வரை சட்டபூர்வ கட்டணமாக நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலித்துக் கொள்கின்றன. இப்படியாக நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழைகளுக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காமல் தடுத்த மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சட்டபூர்வமாக்கியுள்ளது’’ என்று விளக்கியுள்ளார் அன்புமணி.
மேலும், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண மாநில அரசால் நிரப்பப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பாமகவின் இளைஞரணித் தலைவர்.
நிகர்நிலை பல்கலைகளின் கல்லா நிரப்பும் நீட்! நிகர்நிலை பல்கலைகளின் கல்லா நிரப்பும் நீட்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.