வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி


வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் பாதிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ரிசெப் தையிப் எர்துகான் வெற்றிபெற்றுள்ளதாக துருக்கி தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் துருக்கியின் முதல் செயல் ஜனாதிபதி என்கிற அந்தஸ்தை எதுக்கான் பெற்றுள்ளார்.
மொத்தம் பதிவான 99.2 சதவிகித வாக்குகளில் எர்துகான் 52.5 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய எர்துகான், “நமது ஜனநாயகம் வென்றுள்ளது. மக்களின் எண்ணம் வென்றுள்ளது. துருக்கி வென்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
எர்துக்கானின் வெற்றிக் கொண்டாட்டத்தை காண வந்த அஹ்மெத் டிந்தரோல் என்பவர், “இந்த அழகான நாளை காட்டிய இறைவனுக்கு நான் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எர்துகானை முதல் செயல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்காக நாங்கள் அதிகம் பிரார்தனை செய்தோம். இன்றிலிருந்து அனைத்தும் நன்றாகும். அதிகாரம் குறைந்து முதலீடு அதிகாரிக்கும். துருக்கிய அரசியலில் விளையாடி வந்த அந்நிய சக்திகளுக்கான பதில் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் எர்துகானை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் முஹர்ரம் இன்ஸ் 30.6% வாக்குகளை பெற்றுள்ளார். தேர்தல் முடிவை அடுத்து தனது தோல்வியை ஒப்புக்கொண்ட இன்ஸ், இந்த தேர்தல் நேர்மையற்றது என்றும் தற்போது வரவுள்ள செயல் ஜனாதிபதி முறை ஆபத்தான ஒரு மனித ஆட்சிமுறை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “தேர்தல் முடிவுகளை நான் ஏற்கின்றேன். எர்துகான் 8 கோடி மக்களுக்கு ஜனாதிபதியாக திகழ வேண்டும். ஆனால் இந்த தேர்தல், அதன் முடிவுகள் அறிவிக்கும் வரை நேர்மையற்று நடைபெற்றது. மேலும் துருக்கி, எல்லோருக்குமான துருக்கியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் துருக்கியின் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் ஒருங்கே நடைபெற்றது. மேலும் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட துருக்கியின் அரசியல் சாசன மாற்றங்கள் மூலம் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற தலையீடு எதுவும் இல்லாமல் அதிக உரிமைகளை வழக்கப்படும். இதன் மூலம் ஜனாதிபதி அலுவலகம், துணை ஜனாதிபதி, அமைச்சர்கள், உயர் நிலை அதிகாரிகள் மற்றும் மூத்த நீதிபதிகளை நியமிக்கும் சக்தி பெற்றுள்ளது. மேலும் இத்துடன் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து அவசரநிலையை பிரகடனப்படுத்தவும் முடியும். நாள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பாராளுமன்ற தேர்தலுடன் ஜனாதிபதிக்கான தேர்தலும் நடைபெற வேண்டும்.
துருக்கி லிராவின் மதிப்பு சர்வதேச அளவில் மதிப்பு குறைந்து காணப்படும் நிலையிலும், துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் இடையேயான மோசமான உறவுகளுக்கு நடுவேயும் எர்துகான் தற்போது செயல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி Reviewed by நமதூர் செய்திகள் on 23:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.