பொருளாதார நெருக்கடி? - குவைத் நாடாளுமன்றம் கலைப்பு!


குவைத் நாடாளுமன்றத்தைக் கலைத்து இளவரசர் ஷேக் ஷபா அல்-அஹமது அல்-ஷபா அறிவித்துள்ளார். குவைத் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இளவரசர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். குவைத் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதாரப் பிரச்னை அதிகரித்து வருவதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் மார்சவுக் அல் கனேம் கூறியிருந்தார். இந்நிலையில், இளவரசர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இளவரசர் அறிவித்தார். சபாநாயகர் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அரசியலமைப்புபடி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
அரபு நாடுகளிலேயே குவைத் நாடாளுமன்றம்தான் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமாக உள்ளது. குவைத் அரச குடும்பத்தினர் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனம் செய்து வருகின்றனர். துபாய், தோஹா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால், குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்குமுன், குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களைக் கூறி வந்தனர். இதன் காரணமாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் நாடாளுமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பல மாதங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. இதையடுத்து 2012ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி? - குவைத் நாடாளுமன்றம் கலைப்பு! பொருளாதார நெருக்கடி? - குவைத் நாடாளுமன்றம் கலைப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 01:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.