திருச்சி அருகே டிரைவர் மீது மிளகாய்பொடி தூவி காரை கடத்தி சென்ற மர்ம கும்பல்



திருச்சி, பிப். 2–
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிங்கம் புணரி அருகே உள்ள கீரைக் காட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா (வயது 35). இவர் சொந்தமாக ஆம்னி கார் வைத்து உள்ளார். இதில் தினமும் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வார். அவ்வப்போது வெளியூர் சவாரிக்கும் செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரம் கணேச வார்டு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று உறவினரை அழைத்து வரவேண்டும் எனக்கூறி அமானுல்லாவை சவாரிக்கு அழைத்தார்.
இரவு 7 மணிக்கு மதுரை யில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். கொட்டாம்பட்டி அருகே வந்ததும் ராஜா அங்கு நின்றுகொண்டிருந்த மேலும் 2 பேரை தனது நண்பர்கள் என கூறி காரில் ஏற்றி கொண்டார்.
பிறகு கார் திருச்சியை நோக்கி வந்தது. திருச்சியை நெருங்கி கொண்டிருந்தபோது மணிகண்டம் அருகே பாத்திமா நகர் வந்ததும் ராஜாவின் நண்பர் சிறுநீர் கழிக்கவேண்டும் என கூறினார். உடனே அமானுல்லா காரை நிறுத்தினார்.
காரில் இருந்து இறங்கிய ராஜாவின் நண்பர் டிரைவர் இருக்கை அருகில் வந்தார். அப்போது பின் இருக்கையில் இருந்த ராஜா திடீரென அமானுல்லாவின் கழுத்தை நெரிக்க தொடங்கினார். அமானுல்லா அதிர்ச்சியில் சத்தம் போடவே சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய ராஜாவின் நண்பர் அமானுல்லாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர்.
இதனால் அமானுல்லா அலறினார். அப்போது ராஜாவும் அவரது நண்பர்களும் அமானுல்லா உடலில் கத்தியால் கீறினர். உடனே நிலை மோசமாவதை உணர்ந்த அமானுல்லா காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
பிறகு அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை பிடித்து இழுப்பூர் அன்னவாசலில் உள்ள தனது உறவினர் முகமது யூசுப் வீட்டிற்கு சென்று தகவலை கூறினார். உடனே அமானுல்லாவை அழைத்து கொண்டு உறவினர்கள் மணிகண்டம் பாத்திமா நகர் வந்தனர். ஆனால் அதற்குள் ராஜாவும் அவரது நண்பர்களும் காரை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து அமானுல்லா மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முருகையன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். காரை கடத்தி சென்ற கும்பல் திருச்சி வழியாக தப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அமானுல்லாவின் கார் கடத்தப்பட்டதற்கு வேறு ஏதும் முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமானுல்லாவின் சொந்த ஊரான சிங்கம்புணரி அருகில் உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜாதொட்டி ஆட்டோ ஓட்டி வருகிறார். ஏற்கனவே அமானுல்லாவிற்கு பழக்கம் ஆனவர் என கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பே அமானுல்லாவை வெளியூர் செல்ல வேண்டும் ராஜா கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திருச்சிக்கு செல்ல வேண்டும் என அழைத்து வந்து காரை கடத்தி சென்றுள்ளார்.
வரும் வழியில் அமானுல்லா கழுத்தை நெரித்தும் மிளகாய் பொடி தூவியும் கத்தியால் கிழித்தும் காயப்படுத்தி உள்ளனர். முன்கூட்டியே தெரிந்த நபரான ராஜா இதில் ஈடுபட்டுள்ளதால் கார் கடத்தலுக்கு வேறு காரணம் இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
திருச்சி அருகே டிரைவர் மீது மிளகாய்பொடி தூவி காரை கடத்தி சென்ற மர்ம கும்பல் திருச்சி அருகே டிரைவர் மீது மிளகாய்பொடி தூவி காரை கடத்தி சென்ற மர்ம கும்பல் Reviewed by நமதூர் செய்திகள் on 22:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.