அம்பேத்கர் பேசுகிறார்

வாழ்க்கை முறை
ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை. அனைத்துக் கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.
ஆவணம் அல்ல; ஆன்மா!
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வெறுமனே வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆவணம் அல்ல; அது வாழ்க்கைக்கான வாகனம். அதன் ஆன்மா என்பது எப்போதுமே இந்த யுகத்தின் ஆன்மாதான்.
அக மேம்பாடு
கடலோடு சேரும் நீர்த் துளி தனது அடையாளத்தை இழக்கும். ஆனால், மனிதன் தான் வாழும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் தனது அடையாளத்தை இழப்ப தில்லை. மனிதனுடைய வாழ்க்கை என்பது சுதந்திரமானது. அவன் பிறந்தது சமூகத்தின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல, அவனது அக மேம்பாட்டுக்காகவும்தான்.

முன்நிபந்தனை
மனம், ஆத்மா ஆகியவற்றின் விடுதலைதான் அரசியல்ரீதியாக மக்கள் வலுவடைவதற்கு அவசியமான முன்நிபந்தனை.
உயிர்ப்பின் அடையாளம்
சுதந்திரமான சிந்தனைதான் உண்மையான விடுதலை. ஒருவன் அகவிடுதலை அடைய வில்லை என்றால், உயிருடன் இருந்தாலும் அவன் பிணம் மாதிரிதான்.
பெண்கள்தான் அளவுகோல்
ஒரு சமூகத்தின் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே அந்தச் சமூகம் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை அளவிடுவேன்.
எந்த மதம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்… மதம் என்பது மனிதனுக்காகத்தான். மதத்துக்காக மனிதன் அல்ல!
விசித்திர முரண்
இன்றைய இந்தியர்களை இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருக் கின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டிருக்கும் அரசியல் லட்சியமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. ஆனால், அவர்களுடைய மதத்தில் வேர்கொண்ட அவர்களின் சமூக நெறிகளோ மேற்கண்ட மூன்றையும் மறுக்கிறது.
ஆட்சிக் கோட்பாடு
சமத்துவம் என்பது ஒரு கற்பனையாக இருக்கலாம், ஆனாலும் அதை ஒரு ஆட்சிக் கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
தனிமனித வழிபாடு
மதத்தைப் பொறுத்தவரை பக்தி என்பது ஆத்ம ஈடேற்றத்துக்கான பாதையாக இருக்கலாம். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை, பக்தியோ தனிமனித வழிபாடோ சீரழிவுக்கான பாதையாகி, கடைசியில் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும்.
இயந்திரங்களும் நவீன நாகரிகமும்
விலங்கைப் போல் மனிதன் வாழ்வதிலிருந்து அவனை விடுவிக்க இயந்திரங்களும் நவீன சமூகமும் மிகவும் அத்தியாவசியமானவை. அது மட்டுமல்லாமல், இயன்ற அளவுக்கு அவனுக்கு ஓய்வு நேரத்தையும் கலாச்சார வாழ்க்கையையும் தருவதற்கு அவை அவசியம். ‘இயந்திரங்கள், மேலும் இயந்திரங்கள்; நாகரிகம், மேலும் நவீன நாகரிகம்’ என்பதே ஜனநாயகச் சமூகத்தின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
முதலும் முடிவுமாக இந்தியரே!
இந்தியர் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் காட்ட வேண்டிய பற்றுக்கு நமது மதப்பற்று, கலாச்சாரப் பற்று, மொழிப்பற்று போன்ற எந்தப் பற்றாலும் துளிகூடப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. முதலும் முடிவுமாக நாம் எல்லோரும் இந்தியர்களாகவே இருக்க வேண்டும், வேறு எதுவாகவும் அல்ல!
- தொகுப்பு: ஆசை
அம்பேத்கர் பேசுகிறார் அம்பேத்கர் பேசுகிறார் Reviewed by நமதூர் செய்திகள் on 00:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.