இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.

சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலங்கையில் உள்ள பவுத்த பிக்குகளின் ‘பொதுபல சேனா' என்ற அமைப்பினர் அளுத்கம், பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் பள்ளி வாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

த.மு.மு.க.- வி.சி. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்து கொண்டார். 

இந்திய தேசிய லீக் கட்சி 
அதே போல் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை அவர்கள் எரிக்க முயன்றனர். இதையடுத்து அதை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். 

எஸ்.டி.பி.ஐ. கண்டனம் 
மேலும் எஸ்.டி.பி.ஐ.யும் முஸ்லிம்கள் படுகொலையை வன்மையாக கண்டித்துள்ளது. அக் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்களை நிர்மூலமாக்கிய பின், தற்போது இலங்கையின் இனவெறி அங்கு வாழும் மற்ற சமூகங்கள் மீது திரும்பியுள்ளது. அதனடிப்படையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து இலங்கையில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஆதரவோடு "பொதுபல சேனா'' போன்ற இனவெறி இயக்கங்கள் வேரூன்றி வலுப்பெற்று வருகின்றன. கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய இலங்கை அரசின் காவல்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே துப்பாக்கி சூட்டை நடத்தி 3 பேரை படுகொலை செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த இனவெறிக்கு எதிராக சர்வேதேச சமூகங்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசு இலங்கை தூதரிடம் தனது கண்டனத்தை தெரிவிப்பதோடு இனிமேலும் இதுபோன்ற இனவெறி தாக்குதல் நடைபெறா வண்ணம் இலங்கையை அறிவுறுத்த வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை கண்டித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று த.மு.மு.க. ஆர்ப்பாட்டம். இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று த.மு.மு.க. ஆர்ப்பாட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 21:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.