கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்!


கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்!
பெரம்பலூர்,ஜூன்13:
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்டு 7ஆண்டுகளாக தரிசாக போடப்பட்டுள்ள 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், தமிழகத்தில் மட்டும் 7இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக் கப்பட்டுள்ளன. தமிழக அளவில் குறிப்பிட்ட இடங்களில், அதுவும் வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொரு ளாதார மண்டலம் வறட்சியான மாவட்டமென பெயரெடுத்த பெரம்பலூரிலும் அமைக்கப்படும் என்று மத்திய மாநிலஅரசுகள் முடிவெடுக்க முக்கியக் காரணம் கடந்த திமுக அரசுதான்.
இதற்கென மாவட்ட வருவாய் அதிகாரியாக நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டு அவருக்குக்கீழ் தாசில்தார் நிலையிலுள்ள 14பேர்கொண்ட குழுஅமைக்கப் பட்டது. மேலும் அப்போதிருந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. மத்திய அரசால் வகுக்கப்பட்ட திட்டமாக இருப்பினும், தமிழ்நாடுஅரசின் தொழில்வளர்ச்சி நிறுவனமான டிட்கோ பரிந்துரைத்த தனியார்அமைப்புதான் திட்டத்திற்கான பெரும்பகுதி நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. திட்டத்திற்காக குன்னம் தாலுகாவில் லப்பைக்குடிக்காடு பெண்ணகோணம் திருமாந்துறை மற்றும் வேப்பந்தட்டை தாலுகாவில் அயன்பேரையூர், எறையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பகுதிகள் தேர்வுசெய்யப்பட்டன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக 2,800 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பாக சுமார் 100 ஏக்கர்நிலம் கையப்படுத்தும்பணி நடைபெற்றது. மத்தியமாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட இத்திட்டப்பணி, ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு அநாதை யாக கேட்பாரற்று கிடக்கிறது. முப்போகம் விளையக்கூடிய இந்த விளைநிலங்கள் தற்போது தரிசாகக் கிடக்கின்றன.2010வரை டிஆர்ஓ நாராயணன் உள்பட 3டிஆர்ஓக்கள் நியமனத்திற்குப்பிறகு வேறுயாரும் இத்திட்ட அதிகாரிகளாக நியமிக்கப்படவில்லை. 14குழுக்களாக செயல்பட்டு வந்த நிலம் கையப்படுத்தும்பிரிவு தற்போது செயல்படவில்லை.
இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த கனவு படிப்படியாகத் தகர்ந்து போனது. நிலத்தை கொடுத்தவர்களுக்கும், திட்டத் தால் புதிய வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கும் தலையில் இடி விழுந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பெருவளர்ச்சியை முடக்கிப்போட்ட சிறப்புப் பொரு ளாதார மண்டலத் தின் நிலைகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பினால், நிலத்தை கையகப்படுத்திய தனியார் நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளதாக வெப் சைட்டில் போடப்பட்டுள்ளது. இனி மேல் அந்தநிறுவனத்தால் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற சம்மந்தமில்லாத பதிலே கிடைக்கிறது. திட்டத்திற்காக கேட் டுப் பெறப் பட்ட நிலங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீதிருந்த நம்பிக்கையால்தான் விவசாயிகளால் வழங்கப்பட்டது. தற்போது திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் வாங்கிய நிலத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகமே பெற்றுத்தரவேண்டும், அல்லது தனியார் நிறுவனத் திடமிருந்து தற்போதுள்ள அரசாவது கூடுதலாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்! கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.