பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக்

இந்திய ரிசர்வ் வங்கி 29.08.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி ரூ. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய்  தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ. 15.31 இலட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியை சந்தித்திருப்பது தெளிவாக தெரிகிறது.
ரூ. 13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதையும்கூட திரும்ப வராத பணம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இன்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஏறத்தாழ ரூ. 8,000 கோடி வரையில் ரூ. 500, ரூ 1000 தாள்கள் இருக்கின்றன. அதேபோல் நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலும் ரூ. 500, ரூ 1000 இருந்து வருகின்றன. அந்த தாள்களை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுவும் வந்து சேர்கின்றபோது இந்த ரூ. 13,000 கோடி என்பது பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கிறது.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பிரயோசனத்தையும் தேசத்திற்கு அளிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. வெறும் ரூ. 13,000 கோடியை பணமதிப்பிழப்பு செய்ய மிகப்பெரிய விலையை இந்த தேசம் கொடுத்திருக்கிறது. 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 1.5% இழந்திருக்கிறது. இதனால் ரூ. 2.25 இலட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பழைய தாள்களை மாற்றுவதற்கு மக்கள் பட்ட துன்பங்களை சொல்லிமாளாது. எவ்வளவு பெரிய துயரம் அது. நினைக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. இப்படி இந்த தேசத்தின் கட்டுமானத்தையே முழுவதுமாக சிதைத்த ஒரு திட்டமிடாத நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு இருந்திருக்கிறது.
கருப்பு பண ஒழிப்பை நோக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் கருப்பு பணம் உண்மையில் ஒழிந்ததா என்ற கேள்வியை எல்லோரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள். ‘ஊழல், கருப்பு பணத்தின் கோரப்பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்காக தனது அரசு புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ 1000  நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்துவிட்டதாக’ பிரதமர் மோடி 08.11.2016 அன்று தொலைக்காட்சியில் அறிவித்தார்.
‘தேச விரோத, சமூக விரோத கும்பல் பதுக்கி வைத்திருக்கும் ரூ. 500, ரூ 1000  நோட்டுக்கள் இனி வெற்றுக் காகிதங்களாகிவிடும்’ என்று கர்சித்தார். அந்த உரையின்போது ஏறக்குறைய 18 முறை ‘கறுப்புப்பணம்’ என்ற வார்த்தையை பிரயோகித்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட பிரமான பத்திரத்திலும் ‘கருப்பு பண’ ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே மத்திய அரசு  கூறியது. மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ‘காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவால் பயன்பட்டுவரும் 4 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் முடக்கப்படும்’ என்று ஆணித்தரமாக வாதித்தார்.
2017 ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ரூ. 3 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் வங்கிகளுக்கு திரும்ப வராது’ என்று பெருமை பொங்க பேசினார். இன்று இவைகள் எல்லாம் பொய்யாகி மக்கள் முன் அம்பலமாகி நிற்கிறது. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணத்தையோ லஞ்சத்தையோ ஒழிக்க இயலாது. மொத்த கருப்பு பணத்தில் 1% மட்டுமே ரொக்கமாக இருக்கிறது. மீதியனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் இருப்பாகவோ இருக்கிறது’ என்று அப்போது பலரும் எடுத்துரைத்தனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி வகையறாக்கள் கேள்வி கேட்ட எல்லோரையும் தேச விரோதிகளாக, கருப்பு பணத்தின் ஆதரவாளராக சித்தரித்தனர்.
‘பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் என்றால் அந்நடவடிக்கை 0.01% கருப்பு பணத்தைக்கூட ஒழிக்கவில்லை’ என்று பேராசிரியர் அருண்குமார் சுட்டுகிறார். ‘தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்து தரப்பு மக்களையும், துறைகளையும் தாக்கியுள்ள மேலும் தாக்க போகின்ற ஒரு தரைவிரிப்பு குண்டு வீச்சு என்றுதான் வர்ணிக்க வேண்டியுள்ளது’ என்று பொருளாதார பேராசிரியர் க.ஜோதி சிவஞானம் குறிப்பிடுகிறார். இவர்களை போன்ற தீர்க்கதரிசிகள் சொன்னவைகள்தான் இன்று உண்மையாக வெடித்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டதால் மோடி அரசு மாற்றி மாற்றி பேச ஆரம்பித்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவில்லையென்றாலும் இது கள்ளப்பணத்தை ஒழிக்கும் என்று சொன்னார்கள். அதுவும் விரைவிலேயே வெளுத்துவிட்டது. பிடிபட்ட கள்ளப்பணமோ வெறும் 0.001% தான். ரூ 15.44 இலட்சத்தில் வெறும் ரூ. 400 கோடிதான் கள்ளப்பணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை பிடிப்பதற்காக மக்களிடம் 86% புழக்கத்தில் இருந்த ரூ. 15.44 இலட்சத்தை மதிப்பு நீக்கம் செய்த மோசடி அரசாக உலகிலேயே மோடி அரசாக மட்டுமே இருக்க முடியும். இதுவும் கேள்விக்கும், கேலிக்கும் உண்டானது. ‘2017-2018 நிதியாண்டில் 5,22,783 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக’ ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே கள்ளப்பணம் ஒழிக்கப்படவில்லை என்பதற்கு போதுமான சாட்சியாகும்.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப்பணத்தையும் தடுக்க முடியவில்லை, பணமில்லா பரிவர்தனையும் சாதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை சிதைத்ததும்; தேசத்தின் பொருளாதார கட்டுமானத்தை நொறுக்கியதும்தான் பணமதிப்பிழப்பு செய்தது. இதற்கெல்லாம் மோடி என்ன பதில் வைத்திருக்கிறார். ஏன் மௌனியாக நிற்கிறார்.
கட்டுரையாளர் வி.களத்தூர் எம்.பாரூக் கீற்று, டைம்ஸ் தமிழ் இணையதளங்களில் எழுதிவருகிறார். தொடர்புக்குthasfarook@gmail.com
நன்றி : 
https://thetimestamil.com/2018/09/19/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/
பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 06:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.