ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

சென்னையில் நாளை (ஏப்ரல் 10) நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானம் அருகே கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் பொழுதுபோக்கிற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் போராட்ட நோக்கம் திசை திரும்பி விடும் என்பதால் இதனை ஒத்திவைக்கப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கம் அருகே தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எங்களுக்கு ஐபிஎல் வேண்டாம்; காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இது யாருக்கும் தீங்கின்றி ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் ஒரு போராட்டம். அனைவரும் இதுபோன்று பலூன்களைப் பறக்கவிட்டோ, கறுப்புக் கொடிகளை ஏந்தியோ தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் ஆழ்வார்பேட்டையில் வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தி.நகர் உதவி ஆணையர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் மற்றும் 60 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னையில் போராட்டம்! ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னையில் போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.