ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு!

ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில்  நிலத்தடி நீர் மாசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நிலத்தடி நீரில் அதிக அளவில் உலோகங்கள் கலந்திருப்பதால் அவை குடிப்பதற்கு உகந்தது அல்ல என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டிருக்கிறதா என்று நேற்று (ஜூலை 23) மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால், “தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்த அளவைவிட நிலத்தடி நீரில் அதிக உலோகங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. லெட், கேட்மியம், குரோமியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய கனிமங்களும் நீரில் அதிக அளவில் உள்ளது.”
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு உலோகங்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் 1974 (நீர்நிலைப் பாதுகாப்புச் சட்டம்)ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தொழில்துறை மாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது எனவும் மேலும், நிலத்தடி நீரில் உள்ள மாசுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்கள் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கேரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு! ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு! Reviewed by நமதூர் செய்திகள் on 06:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.