அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
மல்கன்கிரி- ஓடிசாவில் பழங்குடியினர் மிக அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அரசின் அலட்சிய போக்கினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் இறந்துள்ளனர். என்ன நடக்கிறது – குழந்தைகளின் இறப்புக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்றான Japanese Encephalitis என்னும் நோய் கொசுவினால் பரவக்கூடியது. தடுப்பூசியின் மூலம் தடுக்கப்படக் கூடிய இந்த நோயினால் ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆண்டிலும் இதுபோல குழந்தைகள் இறந்தனர்.
இது போக பல்வேறு நோயிகளினாலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7000 குழந்தைகள் இறந்துள்ளனர். அங்குள்ள சமூக அமைப்புகள் தொடர்ச்சியாக போராடியும் குழந்தைகள் இறப்பை தடுக்க எந்தவிதமான முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை. இந்த வருடமும் அக்டோபர் முதல் வாரம் முதலே குழந்தைகள் தொடர்ச்சியாக இறப்பதை பற்றிய செய்திகள் வரத் தொடங்கினாலும், போர்க்கால அடிப்படையில் மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மிகவும் காலதாமதமாக அரசு அமைத்த உயர்மட்ட மருத்துவ குழுவோ வெறும் 5 மாதிரிகளை மட்டும் ஆய்வு செய்து Japanese Encephalitis னால் சில குழந்தைகளும் அந்த பகுதிகளில் விளையும் விஷ விதைகளை தவறுதலாக உண்டதால் மற்ற குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அங்குள்ள அடிப்படை மருத்துவ வசதிகளின் குறைபாடுகளை பற்றியோ குழந்தைகளின் ஊடச்சத்தின்மையை பற்றியோ எதுவும் பேசாது பழங்குடியினரின் அறியாமை தான் இறப்புகளுக்கு காரணம் என்று கூறி அரசின் மீது விழுந்த பழியினை களைய முயன்றது. “பானா சகுண்டா” எனப்படும் அந்த விதை காலங்காலமாக பழங்குடியினர் உண்ணும் விதை தான். அதை உண்டது தான் காரணம் என்றால் ஏன் இதற்கு முன்னர் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை? ஏன் இப்போது மட்டும் குழந்தைகள் இறக்கின்றனர்? ஒரு வேலை அதுவே காரணமாக இருந்தாலும் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் எப்படி தானாக விஷ விதைகளை உண்டிருக்க முடியும்?மேலும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சில குழந்தைகள் கூட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளனர். எதனால் திடீரென்று இறந்தார்கள்? ஆக நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்த பிறகும் இறப்புக்கான உண்மை காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்காக குழந்தைகளை பலி கொடுக்கிறதோ அரசு என்ற ஐயமும் எழுகிறது. இப்படி சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், பன்றிகளின் மூலம் தான் நோய் பரவுகிறது என்று கூறி பன்றிகளை அழித்து அங்கு பன்றி வளர்ப்பை சார்ந்திருக்கும் பழங்குடியினரின் வாழ்வாதாரங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது அரசு. இவை அனைத்தையும் கண்டும் கார்பரேட் ஊடகங்களோ எந்தவித சலனமுமின்றி கள்ள மௌனம் காக்கிறது.
இன்றளவும் தினம் 2-3 குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஓடிசா நவீன் பட்நாயக் அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க “மேக் இன் ஓடிசா” நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான முதலீடுகள் பழங்குடியினர் பகுதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதில் முதலீடாக வரவுள்ளது. மல்கன்கிரி பகுதியிலும் புதிதாக 5 கனிமச்சுரங்கங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, கடந்த மாதத்தில் மட்டும் மல்கன்கிரி மாவட்டத்தில் ஏறத்தாழ 650 பழங்குடியினர் மாவோயிச அனுதாபிகள் என்று போலியாக குற்றம்சாட்டப்பட்டு வலுகட்டாயமாக சரணடைய வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்க படவேண்டியது.
மல்கன்கிரி குழந்தைகள் இறப்பில் அரசின் அக்கறையின்மையையும் செயலின்மையையும் இந்த பின்னணியில் தான் பார்க்க வேண்டியுள்ளது. இப்படி கார்பரேட்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பொருட்டே பல்வேறு வழிகளில் ஒடிசா முழுவதிலுமுள்ள பழங்குடியினர் மீது அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. ஒருபுறம் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்புனர்வுகளின் மூலமாகவும் மறுபுறம் பழங்குடியினரின் இளைய தலைமுறையையே அழிப்பது என்று தொடர்ச்சியாக பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்களின் இருப்பிடத்தை விட்டே வெளியேற்ற முயல்கிறது அரசு. அடிப்படை உரிமைகளை மறுப்பதன் மூலமாகவும் தொடர்ச்சியாக பழங்குடியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் அவர்களின் வாழ்வாதரங்களை அழிப்பதன் மூலமாகவும் சப்தமில்லாமல் ஒரு இன படுகொலையையே நடத்திக் கொண்டிருக்கிறது நவீன் பட்நாயக் அரசு.
பழங்குடி குழந்தைகள் இறப்பை தடுக்கத் தவறிய ஒடிசா அரசைக் கண்டித்து Resist- Youth Against Oppressionஏற்பாடு செய்துள்ள கண்டன கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி நடக்கிறது. தகவலுக்கு:  9566295902, 9444689572
.