தொலைந்து போன வருடங்கள்!

தொலைந்து போன வருடங்கள்!
– ரியாஸ்
இர்ஷாத் அலீ மற்றும் மௌரிஃப் கமர் ஆகிய இரண்டு நபர்களை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பிப்ரவரி 9, 2006 அன்று கைது செய்ததாகவும் அவர்கள் இருவரும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் இர்ஷாத் அலீ டிசம்பர் 14, 2005 முதலும் மௌரிஃப் கமர் டிசம்பர் 22 முதலும் காணாமல் போனதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மௌரிஃப் கமர் கடத்தப்பட்டதாக அவரின் இளைய சகோதரர் ஆகிஃப் டிசம்பர் 28 அன்று வழக்கு பதிவு செய்தார். காணாமல் போனவரை கண்டுபிடித்து தருமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டது.
மௌரிஃபின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ரிட் மனுவை தொடர்ந்து முதல் கட்ட விசாரணையை மேற்கொள்ளுமாறு சிபிஐ-க்கு டெல்லி உயர்நீதி மன்றம் மே 9, 2006 அன்று உத்தரவிட்டது. சிபிஐ-யின் பல்வேறு கேள்விகளுக்கும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பதில் அளிக்க தவறிவிட்டது. அத்துடன் ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறுவதும் நம்பும்படியாக இல்லை என்று சிபிஐ தெரிவித்தது. எனவே வழக்கின் முழு விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலை ஜூலை 4, 2007 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது.
நவம்பர் 11, 2008 அன்று சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் இவர்கள் இருவரும் உளவுத்துறை மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவிற்கு இன்ஃபார்மராக செயல்பட்டவர்கள் என்றும் இருவரும் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் சிபிஐ தெரிவித்தது. 2009ல் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர், வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. உளவுத்துறையின் இன்ஃபார்மராக செயல்பட்டு வந்த இர்ஷாத் அலீயை ஒரு இயக்கத்தில் ஊடுருவ உளவுத்துறை அதிகாரிகள் நிர்ப்பந்தித்ததும் அதில் ஏற்பட்ட பிரச்சனையுமே அவரையும் மற்றொரு இன்ஃபார்மரான மௌரிஃப் கமரையும் பொய் வழக்கில் சிக்க வைக்க காரணம் என்பதை சிபிஐ விசாரணை தெளிவுபடுத்தியது. அத்துடன் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களை ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் சட்டவிரோத காவலிலும் வைத்திருந்தனர்.
சிறையில் இருந்த இர்ஷாத் அலீ உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் அப்பாவிகளை எவ்வாறு பொய் வழக்குகளில் சிக்க வைக்கின்றனர் என்பது குறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தான் தொடர்பு கொண்ட உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் அவர்களின் தொலைபேசி எண்களையும் உளவுத்துறை தனக்கு வழங்கிய தொலைபேசி எண்களையும் அக்கடிதத்தில் இர்ஷாத் அலீ குறிப்பிட்டிருந்தார்.
இவர்களின் வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம், டிசம்பர் 22 அன்று இவர்களை நிரபராதிகள் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. பதினொறு வருடங்கள் தீவிரவாதி என்ற முத்திரையுடன் வாழ்ந்து வந்த இர்ஷாத் அலீ, உளவுத்துறை தனது வாழக்கையை எவ்வாறு சீரழித்தது என்பதை தெரிவித்தார். 1991ல் அலீயின் மூத்த சகோதரர் நௌஷாத் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பரோலில் வந்த அவர் உரிய காலத்தில் சிறைக்கு திரும்பாமல் தப்பித்ததை தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்தன.
அவரை மீண்டும் கைது செய்த காவல்துறை அவர் மீது ஒரு தீவிரவாத வழக்கை சுமத்தியது. கண்டுபிடிக்கப்படாமல் இருந்த ஒரு கொலை வழக்கையும் அவர் மீது சுமத்தியது. இந்த கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதும் தீவிரவாத முத்திரை தொடர்ந்து வந்தது என்கிறார் அலீ.
1996ல் அலீ மற்றும் அவரின் தந்தை யூனுஸ் ஆகியோரை ஏ.சி.பி. ரஜ்பீர் சிங் பத்து நாட்கள் விசாரணையில் வைத்திருந்தார். தனது கண் முன்னால் தனது தந்தையை சித்திரவதை செய்ததை நினைவு கூர்கிறார் அலீ. ‘எனது சகோதரன் தீவிரவாதி என்பதால் நானும் தீவிரவாதியாகத்தான் இருப்பேன்’ என்று கூறினார்கள். அலீயின் தாய் நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்ட அலீ எட்டு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார்.
காவல்துறை அவரை இன்ஃபார்மராக வேலை செய்யுமாறு நிர்ப்பந்தித்தது. 2001ல் மஜீத் தீன் என்ற உளவுத்துறை அதிகாரி அலீயை கடத்திச் சென்றார். தொடர் நிர்ப்பந்தம் மற்றும் மிரட்டல்களை தொடர்ந்து அலீயும் அவர் சகோதரர் நௌஷாத்தும் இன்ஃபார்மர்களாக வேலை செய்ய ஒப்புக் கொண்டனர். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஒரு மொபைல் போனும் கொடுக்கப்பட்டது. உளவுத்துறை அதிகாரியான மஜீத், இன்னும் சில மோசமான வேலைகளை அலீக்கு கொடுத்தார். அவர் கொடுத்த வேலை இதுதான்.
ஒரு மௌலானாவை போல் வேடமிட்டு அலீ ஒரு முஸ்லிம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே சில நாட்கள் வாழ்ந்து, அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இல்லாத ஒரு தீவிரவாத இயக்கத்தில் அவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். பின்னர் உளவுத்துறை சொல்லும் நாளில் ஒரு ரகசிய கூட்டத்திற்கு அலீ ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது காவல்துறை அங்கு வந்து அவர்களை கைது செய்யும். முக்கிய சூத்திரதாரியான அலீ தப்பித்து விடுவார். உளவுத்துறை அடையாளம் காட்டும் அடுத்த இடத்திற்கு சென்று அலீ தனது வேலையை ஆரம்பிப்பார்.
2004ல் உளவுத்துறை அலீயை அழைத்து எல்லையை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலுள்ள ஒரு தீவிரவாத குழுவில் ஊடுருவுமாறு கூறியது. அலீயும் மற்றொரு நபரும் அவ்வாறு ஒரு முயற்சியையும் நடத்தினர். ஆனால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதன் பின்னர் உளவுத்துறையின் போக்கு மாறியது. டிசம்பர் 12, 2005 அன்று தவ்லா கான் அலுவலகத்திற்கு அலீயை உளவுத்துறை அழைத்தது. டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகளும் அங்கிருந்தனர். பின்னர் கண்களை கட்டி அவரை அழைத்து சென்றனர். அதன் பின் பல நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்த பிறகு பிப்ரவரி 9, 2006 அன்று கைது செய்ததாக காட்டினர்.
இவர்கள் இருவரையும் அப்பாவிகள் என்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபிஐ தெரிவித்த போதும் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களின் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தினரின் நிலையையும் கண்டு கொள்ளாத அரசும் காவல்துறையும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தனர்.
“நாங்கள் பொய்யாக வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம் என்பதை சிபிஐ நிரூபித்தவுடன் ஒரு மிகப்பெரும் புயலாக அது உருவாகும் என்று நினைத்தோம். ஆனால் எங்களை போன்ற மக்களுக்காக இங்குள்ள அமைப்புகள் வேலை செய்வதில்லை. சிபிஐ உண்மைய சொல்கிறதா அல்லது சிறப்பு பிரிவு உண்மையை சொல்கிறதா என்ற விவாதம்தான் நடந்தது. இரண்டும் ஒரே அரசாங்கத்தின் கீழ்தான் செயல்படுகின்றன. ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அரசாங்கத்திடமிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையை கூட எங்களால் பெற முடியாது” என்று விரக்தியுடன் கூறுகிறார் அலீ.
அலீ கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திலேயே அவர் தாயார் மரணித்து விட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரின் தந்தை மரணித்தார். அலீ சிறைக்கு செல்லும் போது அவரின் மகளுக்கு வயது ஆறு மாதம். 2013ல் அந்த மகளும் இறந்து விட்டாள். “அனைத்திற்கும் காரணம் இந்த வழக்குதான். இப்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் தீவிரவாதி என்ற முத்திரை இன்னும் இருக்கிறது. சொந்தங்கள் நெருங்கி வர அஞ்சுகின்றனர். எனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை” என்கிறார் அலீ.
பொய் வழக்குகளால் வாழ்க்கை சிதைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதும் இதனை தடுக்க அரசாங்கங்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனையானது.

(புகைப்படத்தில் மனைவியுடன் இர்ஷாத் அலீ. நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ்)
தொலைந்து போன வருடங்கள்! தொலைந்து போன வருடங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.