மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா? - வி.களத்தூர் எம்.பாரூக்

“ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது” என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான்.
ஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி செல்கிறது என்பதை பார்க்கின்றபோது இந்த தாக்குதல் வழிதவறிவிட்டதை உணர முடிகிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்வது என்பது மிகப்பெரிய அசாதாரணமான நடவடிக்கைதான். அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டிராமல் அரசியல் ஆதாயங்கள் பெறுவது என்பதனை நோக்கி நடைபோட துவங்கிவிட்டதால் அதன் தோல்வியும்கூடவே துவங்கிவிட்டது. பிரதமர் மோடியால் மட்டுமே இதுபோல் துணிந்து செயல்படமுடியும் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில். இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் எடுத்தது இல்லை என்றும் பாஜகவினர் தொடர்ந்து பல இடங்களில் பேசி வருகின்றனர்.
உண்மையை அவர்கள் வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். இதுபோன்ற நாணய சீர்த்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1938 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது 10,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு 1946 ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு மீண்டும் 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. இது 1978 ம் ஆண்டு வரை நீடித்தது. பிறகு 1978 ம் ஆண்டு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 100 ரூபாய்க்கு மேல் இருந்த ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்தார். தற்போது 2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை செய்திருக்கிறார். ஆனால் மற்றவைகளை மறைத்து மோடி மட்டும்தான் இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பேசுவது அபத்தமானதாகும்.
இந்திய மட்டுமல்ல இதற்கு முன் பல நாடுகளும் இதுபோன்று நாணயச் சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன. இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம், கானா, மியான்மர், வடகொரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இங்கிலாந்து மட்டுமே தனது நோக்கத்தில் வென்றிருக்கின்றன. மற்ற நாடுகள் தோல்வியைத்தான் தழுவின. அதுபோல் இந்தியாவும் தோல்வியையே தழுவும் என்று பலரும் மதிப்பிடுகிறார்கள். காரணம் இந்தியாவில் கருப்பு பணம் பணமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்தான். பெரும்பகுதியிலான கருப்பு பணம் மனைகளாக, தங்கமாக, தொழில் முதலீடாக, கட்டிடங்களாக பரந்து விரிந்து இருக்கின்றன. இவைகளை கண்டுகொள்ளாமல் நோட்களை மட்டுமே மாற்றுவது என்பது கருப்பு பணத்தை நீடிக்கவே செய்யும்.
“இந்த அறிவிப்பு சரியானது என்று நான் நம்பவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்களை மாற்றுவது சரியான நடவடிக்கை இல்லை. இந்தியாவில் கருப்பு பணம் ரூபாய் நோட்களாக மட்டுமில்லை. தங்கமாக அதிக அளவில் புதைந்து கிடக்கிறது” வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது அறிவித்த அன்றுகூட விடியற்காலை வரை நகைக்கடைகள் திறந்திருந்து வர்த்தகம் நடைபெற்றுள்ளதை பார்க்கும்போது இதன் உண்மையை புரிந்துகொள்ள முடிகிறது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது பலரும் வரவேற்றனர். நாட்கள் செல்ல செல்ல இதன் பின்னணி, திட்டமிடுதல் இல்லாமை, மக்களின் சிரமங்களை குறைக்க தவறியமை போன்ற காரணங்களால் வெறுப்படைந்திருக்கிறார்கள். மக்கள் பெரும்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 60 க்குமேற்பட்டவர்கள் இதனால் மரணமடைந்திருக்கிறார்கள். பணப்புழக்கம் இல்லாததால் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் துயரத்தில் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து மாநிலங்களவையில் தெளிவாக பேசியிருக்கிறார் ” இங்கு ஏறத்தாழ 90 சதவிகித்தினர் முறைசாராத தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த  வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை மிக மோசமான அரசு நிர்வாகத் தோல்வியாக முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது. இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” என அரசின் நிர்வாக தோல்விகளை அம்பலப்படுத்திருக்கிறார்.
உயர் மதிப்பு 500, 1000 நோட்களால் கருப்பு பணம் உருவாவதாக சொல்லும் அரசு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு எப்படி அதைவிட கூடுதல் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்களை அச்சடித்தது. இது மேலும் கருப்பு பணத்தை உருவாக்காதா? என பலரும் வினவுகின்றனர். இதற்கு இதுவரை அரசால் சரியான விளக்கத்தை தரமுடியவில்லை.
அதேபோல் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே இதன் ரகசியம் கசிந்திருக்கிறது. அதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உஷாராகிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது. “500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததில் “மெகா ஊழல்” நடைபெற்றுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரது கட்சியினர் புதிய 2000 நோட்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஆளும் கட்சி மற்றும் தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு இந்த தகவலை கசிய விட்டுள்ளது. பல தொழில் அதிபர்களுக்கும் இந்த விவரம் தெரிந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையில் வங்கியில் டெபாசிட்களின் அளவு அதிகரித்துள்ளதே இதற்கு சான்று” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டிருக்கிறார்.
பாஜகவின் குஜராத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யாத்தின் ஏஸ் “ரூபாய் நோட்டு செல்லாது விவரத்தை முன்கூட்டியே மோடி தனது நெருக்கமானவர்களுக்கு கசியவிட்டதாகவும் அமித்சாவின் அலுவலகம் 37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன” என அவர் கூறியது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.
ராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் “அம்பானிகள், அதானிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை முன்னே தெரியும்” என்று கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மேற்கு வாங்க பாஜக 3 கோடிகளை வங்கியில் செலுத்தியிருக்கிறது. நவம்பர் 01 ம் தேதி 75 லட்சமும், 03 ம் தேதி ஒன்றே கால் கோடியும், நவம்பர் 08 ம் தேதி காலை 60 லட்சமும், அன்று மாலை மோடி தொலைக்காட்சியில் அறிவித்துக்கொண்டிருக்கும்போது 40 லட்சமும் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறது. இதனை இந்தியன் வங்கியும் உறுதி செய்திருக்கிறது.
இதுபோன்ற செய்திகள் நிதி அமைச்சருக்கே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு பிரதமர் மோடிக்கு நெருக்கமானர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உண்மையிலேயே நினைப்பாரானால் முதலில் அவர் கையில் இருக்கிற வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த பட்டியலையே வெளியிட மறுப்பவர் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் “2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ. 3.89 லட்சம் கோடி” என மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். அந்த தொகையை முழுமையாக மீட்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற மல்லையா, லலித் மோடி போன்றோர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது அரசின் பாதையை மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளெல்லாம் எடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். நேர்மை வேண்டும். அந்த துணிச்சலும், நேர்மையும் பிரதமர் மோடிக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
farook- வி.களத்தூர் எம்.பாரூக்

https://thetimestamil.com/2016/11/25/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/

மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா? - வி.களத்தூர் எம்.பாரூக் மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா? - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 05:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.