இரண்டாவதும் பெண் குழந்தை - தாய்க்கு மொட்டை!


இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிந்தாலும்,இன்னும் பெரும்பாலான மக்கள் மனதில் பெண் குழந்தைகள் என்றால் ஒரு சுமை என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. அதனால்,இன்னும் பெண் சிசு கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றனர். பெண் குழந்தை பிறந்தால், குழந்தையை கொல்வார்கள். இப்போது அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயை கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால்,அந்த பெண்ணின் கணவரும் மாமியரும் இணைந்து அவருக்கு மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நானு,ரஷித்துக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது,நானு இராண்டாவது முறையாகக் கர்ப்பம் தரித்து பெண் குழந்தையைப் பெற்று எடுத்துள்ளார். இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், ஆத்திரத்தில் நானுவின் கணவரும், மாமியாரும் சேர்ந்து அவரது தலையை மொட்டையடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்க நானுவை அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து நானு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து, நானுவின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தன் மகளின் வாழ்க்கை புகாரால் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதால் நானுவின் தாயார் அந்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, போலீஸார் நானுவின் கணவரை அழைத்து புத்திமதி சொல்லி அனுப்பினார். மேலும், பிரசவத்திற்கு பிறகு, நானுவின் உடல்நிலை ஆரோக்கியமில்லாமல் இருப்பதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முறையான சிகிச்சை அளிக்கமாறு அறிவுரை கூறினார்கள்.
இதே போன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாஸ்,கிரிஜா ஆகியோருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், கிரிஜா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். இரண்டாவதும் பெண் குழந்தை பிறக்க போகிறது என்று ஜோதிடர் கூறியதை நம்பிய கிரிஜாவின் மாமியார்,இரண்டாவதும் பெண் குழந்தையா என்ற ஆத்திரத்தில் மருமகளின் வயிற்றில் ஆசிட் வீசிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இப்படி, பெண் குழந்தைகளை வெறுப்பதாலும் அவர்கள் மீது கொடுமை நிகழ்த்துவதாலும் இந்தியாவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைகணக்கின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 871 பெண் குழந்தைகளே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதும் பெண் குழந்தை - தாய்க்கு மொட்டை! இரண்டாவதும் பெண் குழந்தை - தாய்க்கு மொட்டை! Reviewed by நமதூர் செய்திகள் on 06:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.