பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்? - புதுமடம் ஜாபர் அலி


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக அமர்ந்திருக்கிறது. எனினும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய முக்கியமான இஸ்லாமியக் கட்சிகளுக்குத் தேர்தல் முடிவு அத்தனை சாதகமாக இல்லை. ஒரே ஒரு இடம் மட்டுமே முஸ்லிம் லீக்குக்குக் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலின் மூலம் சட்டமன்றத்தில் கிடைத்த பிரதிநிதித்துவம்கூட இந்த முறை இல்லை. முஸ்லிம்கள் எனும் ஒற்றை அடையாளத்துக்குள் தாங்கள் அடைக்கப்படுவது பற்றி எந்தப் பிரக்ஞையும் இந்திய முஸ்லிம்களிடம் இல்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம்.

பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மக்கள் தலைவர்களைக்கூட மதச் சிமிழுக்குள் அடைக்கும் அநியாயத்தைச் சுதந்திர இந்தியாவில் தொடங்கிவைத்தது சாட்சாத் காங்கிரஸ் கட்சிதான். இதற்கு இலக்கான முதல் ஆளுமை மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

காங்கிரஸ் செய்த தந்திரம்

மிகச் சிறந்த கல்வியாளரான அபுல் கலாம் ஆசாத், தேசப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர். ‘பிரிவினையை நாம் ஆதரித்தால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது’ என்றவர். இதற்காகவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினரின் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, ஐ.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் என்று அனைத்துக்கும் அடித்தளம் அமைத்தவர்.

இப்பேர்பட்ட மௌலானா ஆசாத்தை 1951-ல் நடந்த முதல் தேர்தலில் ராம்பூரில் வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். என்ன காரணம் தெரியுமா? ராம்பூரில் 80% பேர் முஸ்லிம்கள். அன்று தொடங்கிய இந்த அபத்தம், இன்று வரை தொடர்கிறது. இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட தொகுதிகளில் மட்டுமே முஸ்லிம்கள் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதிகளில் பாஜக போன்ற சக்திகள்தான் அரசியல் ஆதாயம் அடைகின்றன.

அசாம் தோல்வியின் பின்னணி

முஸ்லிம்கள் முன்னிறுத்தப்படும் பகுதிகளில் பெரும்பான்மைவாதத்தை மிக எளிதாக வளர்த்து இப்போது பாஜக தன் கோட்டையாக்கிவருகிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம் அசாம். அம்மாநிலத்தில் ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெல்லும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படி அது சாத்தியமானது?

முக்கியக் காரணி மௌலானா பத்ருத்தின் அஜ்மல். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் வாசனைத் திரவியங்கள் விற்பனையில் பிரபலமானவர். பெரும் செல்வந்தர். அசாமை ஆள வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. வங்க மொழி பேசும் முஸ்லிமான அவர் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள் போதாது என்று, ‘ஆல் இந்தியா யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸோடு கூட்டு வைத்து ‘கிங் மேக்கர்’ ஆக மாற விரும்பினார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, ‘மூன்று கோடிப் பேர் மக்கள்தொகை கொண்ட அசாமில் ஒரு கோடிப் பேர் முஸ்லிம்கள். எனவே, நாம் தனித்தே களம் காண்போம், ஆட்சி அமைப்போம்’என்று களமிறங்கினார். தனித்து நின்ற அவரது கட்சி, காங்கிரஸுக்குப் போக வேண்டிய முஸ்லிம் வாக்குகளை உடைத்துப் பிரித்தது. கடைசியில் இது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்தது.

காயிதே மில்லத்தின் செல்வாக்கு

இஸ்லாமிய மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை நேரடியாக எதிர்ப்பதும், ஆதரிப்பதும் குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினரிடம் மட்டும் இணைந்து அரசியல் செய்வதும் சாணக்கியத்தனமாக இருக்காது. குறிப்பிட்ட ஒரு சக்தியைச் சார்ந்தே முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடு இருந்தால் அது பலவீனத்துக்கே வழிவகுக்கும் என்பதற்குத் தமிழகமே உதாரணம்.

காயிதே மில்லத்துக்குப் பிறகு, தமிழகத்தில் தோன்றிய முஸ்லிம் தலைவர்கள் பலரும் குறுகிய வட்டத்துக்குள் செயல்பட்டுப் பழகியவர்கள். தொலைநோக்குத் தலைமைக்கான ஆளுமை, ஆற்றல் அவர்களிடம் இல்லை. மத நல்லிணக்க அடிப்படையிலான தனது செயல்பாடுகள் மூலம் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாகியிருந்தவர் காயிதே மில்லத். ராஜாஜி, அண்ணாவிடம் கொண்டிருந்த நெருக்கமான நட்பைக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு அவர் மகத்தான தொண்டாற்றியுள்ளார்.

காயிதே மில்லத்தின் வீடு தேடிச் சென்று பேசுவார் அண்ணா. ஆனால், இன்று காதர் மொய்தீன்களும், ஜவாஹிருல்லாக்களும் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தளபதிக்காகக் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் சக்தி தமிழகத்தில் எவ்வளவு தூரம் நீர்க்கடிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான சாட்சி இது.
குழிபறிக்கும் வேலைகள்

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அக்கூட்டணியில் ஏற்கெனவே இருந்த முஸ்லிம் கட்சிகள்தான் என்று இன்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சக முஸ்லிம் இயக்கத்தை வளர்க்க வேண்டிய, அவர்களுக்காக வாதாடி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மூத்த முஸ்லிம் இயக்கங்கள் இப்படி ஒருவருக்கொருவர் குழி பறிக்கும் வேலைகளில் இறங்கினால், முஸ்லிம்களின் அரசியல் எப்படிக் கைகூடும்?

இந்தியா போன்ற மதச்சார்பற்ற தேசத்தில், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதால்தான் அதன் எதிரொலியாக, ‘இந்து’ என்ற பெரும்பான்மைவாத அரசியல் முன்வைக்கப்படுகிறது. அது முஸ்லிம் என்ற அரசியலைவிட அதிக சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கிறது. தீப்பொறியை நம் கையில் வைத்துக்கொண்டு தீப்பந்தத்தை எதிர்க்கப்போகிறோம் என்பது எப்படி புத்திசாலித்தனமாக இருக்க முடியும்?

2005-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை பற்றி ஆராய்ந்து சொல்ல நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். 2006-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், முஸ்லிம்களின் நிலை தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

‘இந்திய முஸ்லிம்களில் 35% பேர் 5-ம் வகுப்புகூடப் படிக்காதவர்கள். 35% பேர் குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் தடுமாறு பவர்கள். பெருநகரங்களில் பிளாட்பார நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான்’என்றது சச்சார் கமிட்டியின் அறிக்கை.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த நிலை இதுவென் றால், இன்றைக்கு முஸ்லிம் இயக்கங்கள் முன்னெடுக்கும் சிறுபான்மை அரசியலை வைத்துப் பார்த்தால், இன்றைய தேதியில் முஸ்லிம்களின் நிலை மேலும் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்ன செய்ய வேண்டும்?

அடித்தட்டு முஸ்லிம்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், முஸ்லிம்கள் பொது நீரோட்ட அரசியலுக்குத் தங்களை நகர்த்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதம், இனம் என்னும் சிமிழுக்குள் தொடர்ந்து முஸ்லிம் தலைவர்கள் தங்களை அடைத்துக்கொண்டால், அதனால் பலனடையப்போவது குறிப்பிட்ட சில முஸ்லிம் பிரமுகர்கள் மட்டுமே. அடித்தட்டு முஸ்லிம்களின் நிலை அப்படியேதான் இருக்கும்.

பள்ளிவாசலில் இருந்து சிறகடிக்கும் புறாக்கள் வெளியெங்கும் உலவும், உணவு தேடும், வானத்தை அளக்கும். மீண்டும் தங்குவதற்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வரும். அதுபோல இந்திய முஸ்லிம்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தைத் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றபடி அவர்களின் அரசியல் சிந்தனை, பள்ளிவாசல் புறாக்கள் போல புதிய வானத்தைத் தேடிச் செல்ல வேண்டும்.

பழைய மாடங்களைவிட புதிய வானங்களே இன்றைய புறாக்களுக்குத் தேவை!

- புதுமடம் ஜாபர் அலி
தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

நன்றி : தமிழ் தி இந்து
பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்? - புதுமடம் ஜாபர் அலி பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்? - புதுமடம் ஜாபர் அலி Reviewed by நமதூர் செய்திகள் on 21:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.