மூடர் கூட்டம் – ரியாஸ்

மூடர் கூட்டம்

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பது என்பது ஒரு ரகம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து எதையும் அறியாமல் இருப்பது மற்றொரு ரகம். இந்த இரண்டும் இணைந்திருந்தால்..தற்போது அமெரிக்க அதிகார வட்டத்தில் இதுதான் நடக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரால் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படுபவர்கள் அறியாமை மற்றும் அராஜகத்தின் கலவையாக இருக்கின்றனர். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள மைக்கேல் ஃப்ளின் இதன் சமீபத்திய உதாரணம்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மதமான இஸ்லாத்தை குறித்தும் அதனை பின்பற்றும் முஸ்லிம்கள் குறித்தும் ஃப்ளின் அறிந்திருப்பதை சமீபத்தில் வெளியான சில வீடியோ பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இஸ்லாம் இந்த உலகில் ஆயிரம் வருடங்களுக்கு உள்ளாகத்தான் தோன்றியது. இஸ்லாத்திற்கு முந்தைய காலம்தான் அரபுகளின் பொற்காலம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குர்ஆனும்தான் அரபுகளை இருண்ட காலத்திற்கு அழைத்துச் சென்றன. இவை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த அவரின் சில புரிதல்கள்.
இவருக்கு இஸ்லாத்தை குறித்தும் அறிவில்லை, அரபுகள் குறித்தும் அறிவில்லை என்பதை இவரின் பேச்சுகள் பட்டவர்த்தனமாய் உணர்த்துகின்றன. இஸ்லாத்திற்கு முன் அரபுகளில் பெரும்பான்மையினர் எழுதப் படிக்க தெரியாதவர்களாய் இருந்தார்கள். பெண்களுக்கு எவ்வித மரியாதையும் உரிமையும் அங்கு கிடையாது. பெற்ற பெண் குழந்தையை உயிரோடு புதைத்தவர்கள். பேரீத்தம் பழங்களால் தங்கள் கடவுளை செய்வார்கள். பசி ஏற்பட்டால் அதே பேரீத்தம் பழத்தை சாப்பிட்டு விடுவார்கள். இனவெறி அவர்களிடம் தாராளமாக இருந்தது. அண்டை வீட்டுக்காரரின் ஒட்டகம் தனது தோட்டத்தில் தண்ணீர் அருந்தியது என்பதற்காக வருடக் கணக்கில் போர் செய்தவர்கள். நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வருவதை புனிதமாக நினைத்தவர்கள். மது வகைகளை பல நாட்கள் புளிக்க வைத்து அதில் பெருமை பேசி அருந்தியவர்கள். அடிமைகளை மனிதர்களாகக் கூட மதிக்க மனம் இல்லாதவர்கள்.
இவற்றைதான் ஃப்ளின் பொற்காலம் என்கிறாரா? கலாசார சீரழிவில் சிக்கி தவிப்பவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாகத்தான் தெரியும். வாழ்க்கையின் பொருளை உணராதவர்களுக்கு இந்த வாழ்க்கை சிறப்பானதாகத்தான் தெரியும்.
இஸ்லாத்தின் வருகை அரபுகளின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. வரலாற்றில் தடம் தெரியாமல் இருந்தவர்களை வரலாற்றின் கதாநாயகர்களாக மாற்றியது. அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், இஸ்லாம் அவர்களை மனிதர்களாக மாற்றியது. வாழும் கலையை கற்றுக் கொடுத்தது.
முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றும் வரை அவர்களால் முன்னேற முடியாது என்கிறார் ஃப்ளின். குர்ஆன் பழங்காலத்திற்கான ஏடு என்றும் தற்போது அது உதவாது என்பதும் ஃப்ளின் கூறும் கருத்துகள். அரபுகள் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்திற்கும் இஸ்லாமே காரணம். கல்வியை ஆர்வமூட்டிய இஸ்லாத்தால் உந்தப்பட்டவர்கள் விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் மருத்துத்திலும் கணிதத்திலும் பயன் தரும் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தனர். இவற்றால் முஸ்லிம்களை விட மேலை நாட்டினரே அதிகளவில் பலன் பெற்றனர்.
பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்கள் பெண்களை கண்ணியப்படுத்தினர். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக அனைத்து தரத்திலும் பெண்களுக்கு உரிய கண்ணியத்தை வழங்கினர். பெண் குழந்தையை உயிரோடு புதைத்தவர்கள் பெண் குழந்தையை பெரும் பாக்கியமாக கருதும் அளவிற்கு மாறினர். மதுவும் விபச்சாரமும் இனவெறியும் இஸ்லாத்தின் வருகையால் மண்ணோடு மண்ணாகின. இவையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குர்ஆனும் அரபுகளிடம் ஏற்படுத்திய மாற்றங்கள். ஃப்ளின் இவற்றையெல்லாம் அறியாமல் பேசுகிறாரா அல்லது அறிந்தும் ஆணவத்தில் பேசுகிறாரா என்று தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து அவதூறுகளை கூறுவதற்கும் ஃப்ளின் தயங்கவில்லை.
அனைத்து தீமைகளின் ஆணிவேரும் தண்டும் அறியாமையே என்று தத்துவஞானி பிளேட்டோ கூறினார். ட்ரம்ப், ஃப்ளின் ஆகியோர் அதனை நிரூபித்து வருகின்றனர். 170 கோடி முஸ்லிம்களையும் அவர்களின் வரலாற்றையும் அறியாத ஒருவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பெற்றுள்ள அமெரிக்க மக்களின் நிலையை அறிந்து பரிதாபமாகத்தான் இருக்கிறது. அமெரிக்க மக்கள் மட்டுமா பரிதாபத்திற்குரியவர்கள்?
நமது நாட்டிலும் ஃப்ளின்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
(புதிய விடியல் டிசம்பர் 16-31, 2016ல் வெளியான கட்டுரை)
மூடர் கூட்டம் – ரியாஸ் மூடர் கூட்டம்  – ரியாஸ் Reviewed by நமதூர் செய்திகள் on 22:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.