மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் வேண்டும்!

மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் வேண்டும்!

‘இந்திய மீனவர்களின் நலன்களைக் காத்திட தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்’ என்று மக்களவையில் அதிமுக எம்.பி டாக்டர் கோபால் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், படகுகள் பறிமுதல் செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்புகளால் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓகி புயலால் கடலில் சிக்கிய மீனவர்களைக் காப்பதற்கு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று நாகை, கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களும் பல்வேறு எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 4) மக்களவையில் அதிமுக எம்.பிக்கள் சார்பாக பேசிய நாகப்பட்டினம் எம்.பி டாக்டர் கோபால், “இந்திய மீனவர்களின் நலன்களைக் காத்திட தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் கடலோரப் பகுதிகளிலுள்ள 13 மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். 15 துறைமுகங்கள், கடற்கரை மற்றும் கழிமுகங்கள், 3 பெரிய மீன்பிடி துறைமுகங்கள், 3 மத்திய தர துறைமுகங்கள், 363 மீன்பிடி திட்டுகள் கொண்டுள்ள தமிழ்நாட்டில் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. ஒருபுறம் இயற்கை சீற்றங்களால் பிரச்னை; மற்றொருபுறம் இலங்கை கடற்படையினரால் பிரச்னை. இலங்கை கடற்படையினரால் ஏற்படும் பிரச்னைக்குக் காரணம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே. எனவே கச்சத்தீவை மீட்டிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.
“விவசாயிகளுக்குத் தள்ளுபடி செய்வது போலவே மீனவர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மீனவர் சமூகத்துக்கு 2 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்ற அவர், “தமிழ்நாட்டில் 40,000 பாரம்பர்ய மீன்பிடி படகுகள் உள்ளன. அவற்றைப் புதுப்பிக்க வருடத்துக்கு ரூ.12 லட்சம் நிதி வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பார்ப்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கக் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் வேண்டும்! மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் வேண்டும்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.