எழுவர் விடுதலை: வேல்முருகன் எழுப்பும் சந்தேகம்!

எழுவர் விடுதலை: வேல்முருகன் எழுப்பும் சந்தேகம்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எழுவர் விடுதலை தொடர்பாக இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ஆளுநரை சந்தித்து மனுவும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் எழுவர் விடுதலை குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்?அதனைத் தமிழ்நாடு அரசும் கண்டுகொள்ளாதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“2009ல் நடந்த தமிழீழ இனப்படுகொலைக்கு திமுக-காங்கிரசைக் கண்டித்து இப்போது அதிமுக நடத்தும் கண்டனக் கூட்டம்; தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்; மேலும் 4 எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்கும் திட்டம் ஆகிய இவையெல்லாம், சட்டப்பிரிவு 161ன் கீழ் எழுவர் விடுதலையைப் பின்னுக்குத் தள்ளவே கிளப்பப்படுகின்றன என்று சொன்னால் அதை மறுக்க முடியுமா?” என்று சந்தேகமும் எழுப்பியுள்ளார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார்; அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று ஆளுநர் பதிலளித்தார். ஆனால் இன்னும் எழுவரையும் விடுவிக்கும் தீர்மானத்தில் மட்டும் கையெழுத்திடவே இல்லை என்று குறிப்பிட்டுள்ள வேல்முருகன், “ஆளுநர் இதில், “பரிசீலிக்கிறேன்” என்று சொல்வதே கூட சட்டவிரோதமாகும். அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரவையின் பிரதிநிதிதான் ஆளுநர் என்பவர். அவருக்கென்று மாற்று எண்ணம் கிடையாது, கூடாது. எனவே தீர்மானத்தில் கையெழுத்திடாமல் அவர் காலம் கடத்துவதை அனுமதிக்க முடியாது.எனவே சட்டப்படி, அடுத்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி உடனடியாக ஆளுநரிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
எழுவர் விடுதலை: வேல்முருகன் எழுப்பும் சந்தேகம்! எழுவர் விடுதலை: வேல்முருகன் எழுப்பும் சந்தேகம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.