ராகுலைப் பார்த்து மோடிக்கு அச்சம்!

ராகுலைப் பார்த்து மோடிக்கு அச்சம்!

ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த வரிசையில். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்திருக்கும் செய்தியில், ராகுலைப் பார்த்து மோடி அச்சம் அடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
நேருவின் சோசலிசப் பார்வையையும், இந்திராகாந்தியின் அரசியல் உறுதியையும், ராஜீவ் காந்தியின் நவீனத்துவச் சிந்தனையையும், சோனியா காந்தியின் அரவணைக்கும் குணத்தையும் ஒருங்கே பெற்று காங்கிரஸ் கட்சியை மட்டுமின்றி இந்தியாவையும் தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் என்று ராகுல் காந்தியை வாழ்த்தியிருக்கிறார் திருமாவளவன்.
இது குறித்து இன்று (டிசம்பர் 12) திருமாவளவன் விடுத்திருக்கும் செய்தியறிக்கையில், “இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பின் காங்கிரஸ் கட்சியின் 16ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தி கடின உழைப்பையும் அரசியல் தெளிவையும் சிறப்பாக வெளிப்படுத்திவந்துள்ளார். ஊழலுக்கு எதிரான அவரது கோபத்தையும், அரசியல் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறையையும் இந்த நாடு பார்த்துள்ளது. பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் அவரை எள்ளி நகையாடியபோதும், சிறுமைபடுத்திப் பேசியபோதும் அவர் அரசியல் நாகரீகத்தை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை. அதுவே அவரது தலைமைத்துவத்துக்குச் சான்றாக உள்ளது’’ எனப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் திருமா.
மேலும், “குஜராத் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறது என ஆதாரமற்ற அவதூறு ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், அபாண்டமான பொய்யைக் கூறியதற்காக நாட்டு மக்களிடம் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு சான்றாக உள்ளது.
வகுப்புவாதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது எல்லோருக்குமே ஆபத்தானதாகும். காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கும் ராகுல்காந்தி இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டி வகுப்புவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்.
ராகுலைப் பார்த்து மோடிக்கு அச்சம்! ராகுலைப் பார்த்து மோடிக்கு அச்சம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.