மக்களவைத் தேர்தலில் ஊடக பிரசாரத்திற்காக மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார் - சீதாராம் யெச்சூரி.


புதுடெல்லி: அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஊடக பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகங்களும் - சமுதாயப் பொறுப்புணர்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்தார்.
ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்காக டெல்லி கன்னாட் பகுதியில் 200 பேரை மோடி வேலைக்கு வைத்திருந்தார்.
இந்தக் குழுவின் அயராத பிரசாரத்தின் விளைவாக மோடிக்கு மக்களிடையே நல்ல பரப்புரை கிடைத்தது. 
மக்கள் நலன் குறித்து ஊடகங்களுக்கு இருந்த அக்கறை படிப்படியாகக் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. சுதந்திரம் கிடைத்த போது ஊடகங்கள் தங்களின் கடமை உணர்வுடன் செயல்பட்டன. அப்போது, மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் கருவியாக ஊடகங்கள் இருந்தன.
ஆனால், அண்மைக் காலமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஒரு சிலரின கருத்துகளை மக்கள் மீது திணிக்கும் போக்கு ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டை வகுத்து கொண்டு, பொதுமக்களின் துயரங்களை அரசுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். 
சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது போல இருந்தது. ஏழைகளுக்கு ரூ. ஒரு லட்சம் காப்பீட்டு வசதியுடன் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டம் எப்போது தொடங்கப் போகிறது? செயல்படுத்தும் விதம் எப்படி? போன்ற கேள்விகளுக்கு அவரது பேச்சில் பதில் இல்லை.
காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துமா? தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? என்பதும் தெரியவில்லை. திட்டக்குழுவைக் கலைக்கப் போவதாகவும் மோடி அறிவித்துள்ளார். இது தவறான முடிவாகும்.
மோடியின் திட்டங்கள் தேசத்திற்கு நஷ்டத்தையும், தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தையும் அளிக்கப்போகிறது. தனியார் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது சரியல்ல என்றார் சீதாராம் யெச்சூரி.
மக்களவைத் தேர்தலில் ஊடக பிரசாரத்திற்காக மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார் - சீதாராம் யெச்சூரி. மக்களவைத் தேர்தலில் ஊடக பிரசாரத்திற்காக மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார் - சீதாராம் யெச்சூரி. Reviewed by நமதூர் செய்திகள் on 00:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.