போரியல் மேதை ஸலாஹுத்தீன் அய்யூபி



யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம். ஸலாஹுத்தீன் அந்த வெற்றிக்குப் பின் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார். இந்த வகையிலும் அவர் மற்ற கலீஃபாக்கள், சுல்தான்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவராகவே இருந்திருக்கிறார்!
இப்படியும் ஒரு மன்னர் இருந்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் ஸலாஹுத்தீன் இப்படித்தான் இருந்திருக்கிறார்!]
நம்பமுடியாத அளவுக்கு இரக்க சுபாவம், அன்பு, கனிவு, பொறுமை, போரில் நாட்டமின்மை போன்ற குணங்களைக் கொண்ட மன்னர்கள் மிகவும் அபூர்வம். இத்தகையவர்களைச் சரித்திரத்துக்குள் நுழைந்து தேடினால் இரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும் எண்ணிக்கை. குறிப்பாக, மத்திய ஆசிய சுல்தான்களுள் இத்தகைய குணம் படைத்தவர்கள் மிக மிக சொற்பம். அந்தச் சொற்ப எண்ணிக்கைக்குள் அடங்குபவர்களில் சுல்தான் ஸலாஹுத்தீன் முதன்மையானவர் மட்டுமல்ல; சற்று வித்தியாசமானவரும் கூட.
ஜெருசலேம் நகரை ஸலாஹுத்தீன் படைகள் சூழ்ந்து நின்றதும் பொதுமக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் கொண்டது, அந்த அறிவிப்புக்குப் பின்னால் நடந்த சம்பவங்களும்.
உண்மையில் ஜெருசலேம் மக்கள் பெரும்பாலும் அப்போது கிறிஸ்துவர்கள்; ஒரு முழுநீள யுத்தத்துக்கு மனத்தளவில் தயாராக இல்லை. ஸலாஹுத்தீனின் தொடர் வெற்றிகள் ஏற்படுத்தியிருந்த பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இத்தனை தூரம் இறங்கிவந்து அன்பாகப் பேசுகிற சுல்தானைப் பொருட்படுத்தாமல் விட்டால் பின்விளைவு வேறு விதமாக இருக்குமோ என்கிற யோசனையும் காரணமாயிருக்கலாம். பேச்சுவார்த்தை மூலம் ஒரு சமாதானத் தீர்வு சாத்தியமா என்று கண்டறியவே அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் ஜெருசலேத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ ஆட்சியாளர்கள் வேறு மாதிரி சிந்தித்தார்கள். முஸ்லிம்படை நகருக்கு வெளியே முற்றுகையிட்டிருக்கிறது. சரி. எத்தனை காலம் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்? நகருக்குள் போதுமான உணவு, மருத்துவ வசதிகள் அப்போது இருந்தன. பல மாதங்கள் வரையிலும் கூடச் சமாளித்துவிட முடியும். கோட்டைக் கதவுகளைத் திறக்காமலேயே ஆனவரை முஸ்லிம் வீரர்களைச் சோர்வு கொள்ளச் செய்வது. அதையும் மீறி யுத்தம் தொடங்குமானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம். தவிர, அதற்குள் ஐரோப்பாவிலிருந்து மேலும் சில படை உதவிகள் வந்து சேரலாம்.
ஆட்சியாளர்களின் இந்தத் திட்டம் சிலுவைப்போர் வீரர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது. அவர்கள் தொடர் யுத்தங்களால் அப்போது மிகவும் சோர்ந்திருந்தார்கள். தவிர, கோட்டைக்குள் சிறைப்பட்டிருப்பது போல அடைந்து கிடப்பதிலும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. நிச்சயமாகத் தாங்களே கதவுகளைத் திறந்து யுத்தத்தைத் தொடங்கினால், தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
ஆகவே, தங்கள் நிலையை அவர்கள் ஆட்சியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். யுத்தம் தொடங்கினால் வெற்றி கிடைப்பது இம்முறை கஷ்டம். வீம்புக்காக முற்றுகையை அனுமதித்துக்கொண்டிருந்த அப்போதைய ஜெருசலேம் ஆட்சிமன்றத்துக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மாதங்கள் கடந்தும் முற்றுகை முற்றுப்பெறாததை எண்ணிக் கொஞ்சம் கவலைப்படத் தொடங்கினார்கள். இப்படியே தாக்குப்பிடிப்பது சிரமம் என்று எப்போது புரிந்ததோ, அப்போது சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு அமைதித் தூது அனுப்பினார்கள்.
சுல்தான் ஸலாஹுத்தீன் புன்னகை செய்தார். யுத்தம் வேண்டாம். அவ்வளவுதானே? அவர் முதலில் முன்வைத்த கோரிக்கையும் அதுதான். ஆகவே தம் சம்மதத்தைத் தெரிவித்ததோடு அல்லாமல் இன்னும் சில படிகள் இறங்கிவந்து ஜெருசலேம்வாசிகளுக்குச் சில சலுகைகளையும் அறிவித்தார்.
அந்த விநாடியிலிருந்து பாலஸ்தீன் முழுமையாக இஸ்லாமியப் பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடும். அதன்பின் ஜெருசலேத்தில் உள்ள மக்கள் அனைவரும் பேரரசின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். உள்ளூர் கிறிஸ்துவர்கள், பல ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். மத வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது. யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் அவர்கள் சமமாக அங்கே வாழலாம். ஆனால், இந்தச் சலுகை ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது. (அதாவது சிலுவைப்போர் வீரர்களுக்குப் பொருந்தாது.)
அவர்கள் மட்டும் தம் குடும்பத்தினருடன் நாற்பது தினங்களுக்குள் ஜெருசலேத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. நகரை விட்டு வெளியேறும் சிலுவைப்போர் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அப்படி வெளியேறுவதற்குப் பிணையத் தொகையாக அவர்கள் தலைக்குப் பத்து தினார்கள் (இந்த தினார் என்பது அந்நாளைய சிரிய நாணயத்தைக் குறிக்கும்.) கட்ட வேண்டும். வீரர்களின் குடும்பப் பெண்கள் தலைக்கு ஐந்து சிரிய தினார் செலுத்தினால் போதும். குழந்தைகள் என்றால் ஒரு தினார்.
இந்தப் பிணையத் தொகையைச் செலுத்தாதவர்கள் சுல்தானின் அடிமைகளாகத் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன்பிறகுதான் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. சுல்தான் ஸலாஹுத்தீன், அரசாங்க ரீதியில் எடுக்கவேண்டிய நடவடிக்கையாக மேற்சொன்ன உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். ஆனால் உடனே அவருக்கு சிலுவைப்போர் வீரர்களின் மீது சற்றே இரக்கம் உண்டானது. உயிருக்குப் பயந்திருக்கும் வீரர்களிடம் கப்பம் வசூலிப்பது பாவமல்லவா என்று அவருக்குத் தோன்றிவிட்டது.
ஆகவே, பிணையக் கைதிகள்தான் என்றாலும் தமது சாம்ராஜ்ஜிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லவா? ஆகவே அவர்களும் தம் குடிமக்கள்தான். அவர்களது கஷ்டத்தைப் போக்குவதும் தன்னுடைய கடமையே என்று நினைத்தவர், கோட்டைக்குள் இருந்த அறுபதாயிரம் சிலுவைப்போர் வீரர்களுள் பத்தாயிரம் பேருக்கான பிணையத் தொகையைத் தானே தன் சொந்தப் பணத்திலிருந்து கட்டிவிடுவதாக அறிவித்தார்! அத்துடன் இன்னும் ஏழாயிரம் வீரர்களுக்கான தொகையைத் தன் சகோதரர் சைபுத்தீன் என்பவர் அளிப்பார் என்றும் சொல்லிவிட்டார்.
சுல்தானே இப்படியரு நடவடிக்கை மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு அவரது அமைச்சர் பெருமக்கள், தளபதிகள் சும்மா இருக்க முடியுமா? ஒவ்வொருவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு முடிந்தவரை சிலுவைப்போர் வீரர்களுக்கான பிணையத் தொகையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
மிகப்பெரிய குற்றவாளிகள் என்று தனித்தனியே அடையாளம் காணப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் சிலரைத் தவிர, பெரும்பான்மையான கிறிஸ்துவ வீரர்கள் சுல்தான் ஸலாஹுத்தீனின் இத்தகைய நடவடிக்கையால் ஒரு பைசா செலவில்லாமல் சுதந்திரமாக திரிபோலிக்கும் டைர் நகருக்கும் செல்ல முடிந்தது. நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ வீரர்கள் தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களைத் தலையில் தூக்கிக்கொண்டு நடந்து செல்வதைப் பார்த்த ஸலாஹுத்தீன், அவர்களுக்கு அரசாங்கச் செலவில் கழுதைகள் வாங்கிக்கொடுக்கவும் உத்தரவிட்டார்!
ஜெருசலேத்தின் அரசியாக அப்போது இருந்தவர் பெயர் சிபில்லா. அவரது கணவரும் ஜெருசலேத்தின் மன்னருமாக இருந்தவரின் பெயர் காட்ஃபிர்டி பொயிலான். அன்றைய தேதியில் ஒட்டுமொத்த மத்திய ஆசிய முஸ்லிம்களுக்கும் இந்த பொயிலான்தான் சரியான வில்லன். செய்த அட்டூழியங்களும் படுகொலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்நாளெல்லாம் அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் மட்டுமே போதித்த இயேசுநாதரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, ரத்தத்தால் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர்.
அத்தகைய மன்னனின் பட்டத்து ராணியான சிபில்லா, நகரை விட்டு வெளியேறியபோது ஒரு முஸ்லிம் வீரர்கூட அவமரியாதையாக நடந்துகொண்டுவிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் ஸலாஹுத்தீன். ராணிக்கு உரிய மரியாதைகள் செய்து, அவருடன் வந்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேண்டிய பண உதவிகள், ஆடைகள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை அளித்து, கௌரவமாகவே வழியனுப்பிவைத்தார்!
என்ன பிரச்னையாகிவிட்டதென்றால், இப்படி பாலஸ்தீனிலிருந்து புறப்பட்டு வெளியேபோன கிறிஸ்துவ சிலுவைப்போர் வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அண்டை நாடுகளில் அடைக்கலம் கிடைக்கவில்லை. அவர்கள் எகிப்துக்குப் போனபோது எந்த நகரமும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு மைல் தூரத்தில் வருகிறார்கள் என்பது தெரிந்ததுமே நகர மக்கள் கோட்டைக்கதவுகளைச் சாத்திக்கொண்டுவிடுவார்கள். ஆச்சர்யம், அப்போது அங்கிருந்தவர்களும் கிறிஸ்துவர்களே!
ஆகவே, குடிமக்களாக வாழ வழியற்று அவர்கள் அகதிகளாக சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அன்று சிரியாவில் அகதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள் என்று ஏதும் கிடையாது. ஊரில் சுற்றித்திரியலாம். அதற்குத் தடையில்லை. ஆனால் உதவிகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அகதிகள் நல்வாழ்வு, மறுவாழ்வு குறித்தெல்லாம் அன்றைய சிரிய அரசு சிந்தித்திருக்கவில்லை.
ஆகவே பல்லாயிரக்கணக்கான ஜெருசலேம் அகதிகள் அன்றைக்குச் சிரியாவில் பட்டினியிலும் குளிரிலும் மடிந்துபோனார்கள். ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக, பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், மணல்வெளி ஓரங்களில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த இந்த சிலுவைப்போர் வீரர்களின் குடியிருப்புப் பகுதிகளை கொடுமையான நோய்கள் தாக்கின. சரியான சுகாதார வசதிகள் இல்லாததாலும் பலர் இறந்தார்கள்.
திரிபோலியில் கோட்டைக்கதவுகள் அடைக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் நாள் கணக்கில் கவனிப்பாரின்றி வெளியே கிடந்தபோது, பசியால் துடித்த தன் குழந்தையொன்றுக்கு உணவிட முடியவில்லை ஒரு தாயால். வேறு வழியே இல்லாமல் கதறியபடி அக்குழந்தையைக் கடலில் வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி நகரின் கோட்டையை நோக்கித் திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை சிலிர்ப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.
கோட்டைக்கு உள்ளே இருந்தவர்களும் கிறிஸ்துவர்கள். வெளியே அல்லாடிக்கொண்டு, அகதிகளாக நின்றவர்களும் கிறிஸ்துவர்கள். சொந்த சமூகத்து மக்களுக்கே உதவ மறுத்த கோட்டைக் கிறிஸ்துவர்கள் நாசமாகப் போகட்டும். அவர்களது பெருங்கனவான மத்திய ஆசியாவில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்கிற எண்ணம் நசிந்து போகட்டும். ஒட்டுமொத்த அரபு மண்ணிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வேரோடு பெயர்த்து வீசப்படட்டும்.
ஒரு தாயின் சாபம்!
இதனால்தான் என்று சொல்லிவிட முடியாதென்றாலும் அப்படித்தான் பின்னால் ஆகிப்போனது. எத்தனைக்கெத்தனை ஐரோப்பாவில் கிறிஸ்துவம் வலுவாக வேரூன்றிக்கொண்டதோ, அத்தனைக்கு அத்தனை அரேபியாவில் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து மறையத் தொடங்கிவிட்டது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஜெருசலேத்தை முற்றுகையிட்டு, வெற்றியும் பெற்றுவிட்டிருந்த சுல்தான் ஸலாஹுத்தீன் இன்னும் கோட்டைக்கு வெளியேதான் இருக்கிறார். வெற்றி வீரராக, நகருக்குள் அவர் காலெடுத்து வைக்கவில்லை. ஏன் அப்படி?
விசாரித்த அவரது மந்திரி பிரதானிகளுக்கு அவர் அளித்த பதில் இன்னும் வினோதமானது. "மொத்த சிலுவைப்போர் வீரர்களும் நகரை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று தெரியவில்லை. இன்னும் ஒரு சிலர் நகரில் இருக்கலாம். அவர்கள் இருக்கும்போதே நாம் வெற்றி விழா ஊர்வலமாக உள்ளே போனால் அவர்கள் மனம் மிகவும் வருத்தப்படும். என்னதான் இருந்தாலும் அவர்களும் குறிப்பிட்ட காலம் இந்நகரை ஆட்சிபுரிந்தவர்கள் அல்லவா? அவர்களை நாம் அவமானப்படுத்தக்கூடாது!’’
இப்படியும் ஒரு மன்னர் இருந்திருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் ஸலாஹுத்தீன் இப்படித்தான் இருந்திருக்கிறார்! அதற்கு என்ன செய்வது?
ஸலாஹுத்தீன் ஜெருசலேம் நகரை முறைப்படி கையகப்படுத்தி, தமது அதிகாரத்தை அங்கே நிலைநாட்டிவிட்டு, சாவகாசமாக அரசுப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியபோது, நகரிலிருந்து வெளியேறிய கிறிஸ்துவர்கள் அண்டை நாடுகளில் பல கஷ்டங்கள் அனுபவிக்கிற செய்தி வந்து சேர்ந்தது. அடடாவென்று உடனே மீண்டும் பரிதாபப்பட்டவர், அவர்கள் அத்தனை பேரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட டைர் (Tyre) நகரில் குடியேறி வசிக்கலாம் என்று அனுமதியளித்தார்.
சிலுவைப்போர் வீரர்கள் எகிப்திலிருந்தும் சிரியாவிலிருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் டைருக்கு வந்து சேர்ந்தார்கள். சுல்தான் ஸலாஹுத்தீன் இத்தனை கருணையுள்ளவராக இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஏதாவது செய்து அந்தக் கருணைக்கு ‘நன்றி’ சொல்லவேண்டாமா?
டைருக்கு வந்த சிலுவைப்போர் வீரர்கள் உடனே அங்கிருந்த கிறிஸ்துவ சமூகத்தினர் அத்தனை பேரையும் ஒன்று திரட்டினார்கள். ஜெருசலேத்திலிருந்து ஸலாஹுத்தீனையும் முஸ்லிம் படையினரையும் என்ன செய்து ஓட ஓட விரட்டலாம் என்று உட்கார்ந்து ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்!
யுத்தங்களில் வெற்றி தோல்வி வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இழப்புகள் அப்படிப்பட்டதல்ல. இன்றைக்குச் சாவகாசமாக, பத்தாயிரம் பேர் இறந்தார்கள், ஐம்பதாயிரம் பேர் இறந்தார்கள் என்று பழைய போர்க்கதைகளை நினைவுகூர்ந்துவிட முடிகிறது. அவை நடந்த காலத்தில் அந்தப் பேரிழப்புகள் ஒவ்வொரு தேசத்துக்கும் அளித்த வலிகள் கொஞ்சநஞ்சமல்ல. மீண்டு எழுவதற்கு எத்தனையோ பல காலம் ஆகும் என்ற கணிப்புகளையெல்லாம் தூள் தூளாக்கி, மீண்டும் மீண்டும் போர் முரசு கொட்டினார்கள் என்றால், நோக்கத்தில் எத்தனை தீவிரம் இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான கிறிஸ்துவர்களின் சிலுவைப்போர்களில் ஏற்பட்ட மொத்த இழப்பு எத்தனை என்பதற்குத் திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. குறைந்தது பத்திருபது லட்சங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. நவீன ஆயுதங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படாத காலகட்டத்தில் வாள்களும் விஷ அம்புகளுமே முக்கிய ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போரில் இறந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் கடலில்தான் வீசியெறியப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒரு கிராமத்தையே தோண்டி மாபெரும் குழியாக்கி, மொத்தமாகப் பிணங்களைத் தள்ளி மூடியிருக்கிறார்கள் அல்லது எரித்திருக்கிறார்கள். மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும் குன்றுகளின் சிகரங்களுக்குப் பிணங்களைக் கொண்டுபோய் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள். போர் புரியும் படை ஒருபுறமென்றால் இப்படிப் பிணங்களை அப்புறப்படுத்தும் படைகளே தனியாக இயங்கியிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான பிணங்களைத் தொடர்ந்து பார்த்தும் சுமந்தும் செல்ல நேர்கிறவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யூகிப்பது சிரமம். மதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிற யுத்தம். மிகச் சிலருக்காவது அந்த இழப்புகள் ஞானத்தைத் தந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கத் தோன்றலாம். உண்மையில் மேலும் யுத்தம், மேலும் மேலும் உக்கிரமான யுத்தம் என்பதாகத்தான் இருந்திருக்கிறது. இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அரசியலைக் காட்டிலும் வீரியமுள்ளதொரு சக்தியாகவே மதம் இருந்திருக்கிறது என்பதைத்தான். இந்த யுத்தங்களின் சூத்திரதாரியாக இருந்தவர் போப்பாண்டவர் என்பதையும் இதனுடன் இணைத்து யோசிக்கலாம். அன்றைக்கு ஐரோப்பாவை ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்துவ மன்னர்களைக் காட்டிலும் இந்தப் போப்பாண்டவர்களுக்கு இந்த யுத்தத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவர்களுக்கு யுத்தத்தில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் எழுச்சியூட்டும் சக்தியாக முன்னின்று செயல்பட்டவர்கள் அவர்களே. ஒவ்வொரு போப்பாண்டவர் மாறும் போதும் இந்த யுத்த நோக்கத்தைத்தான் தம் சீதனமாக அடுத்து வருபவருக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறார் என்று தெரிகிறது. சரித்திரத்தின் மிகச் சூடான பக்கங்கள் இவை.
இல்லாவிட்டால் சுல்தான் ஸலாஹுத்தீன் ஜெருசலேத்தை வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிய கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளாகவே இன்னொரு யுத்தம் எப்படிச் சாத்தியமாக முடியும்?
டைர் (Tyre) நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்த சிலுவைப் போர் வீரர்கள், அங்கிருந்த ஏனைய கிறிஸ்துவர்களை ஒன்று திரட்டி உடனடியாக இன்னொரு பெரிய யுத்தத்துக்கான அடித்தளத்தை மிக உறுதியாகக் கட்டத் தொடங்கியிருந்தார்கள். இந்த உடனடி எழுச்சியின் பின்னால் இருந்தவரும் அன்றைய போப்பாண்டவர்தான். அவரது உத்தரவின் பேரில் ஜெர்மனியின் அரசராக இருந்த பிரடரிக் பார்பரோஸா (Frederick Barbarossa) என்பவரும் இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்டும் (King Richard 1) பிரான்ஸ் பேரரசர் பிலிப் அகஸ்டஸ் (Philip Augustus) என்பவரும் கூட்டாகப் படை திரட்டிக்கொண்டு சிலுவைப்போர் வீரர்களுக்கு உதவுவதற்காக பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள்.
மூன்றாவது சிலுவைப்போர் என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கொடும்யுத்தம், சிரியாவின் ‘ஏக்ர்’ என்னும் கோட்டை முற்றுகையில் ஆரம்பமானது.
கண் திகட்டிப் போகுமளவுக்கு சிலுவைப்போர் வீரர்கள் அக்கோட்டையின் வெளியே அலையலையாக அணிவகுத்து நின்றார்கள். அவர்களை விரட்டியடித்து எப்படிக் கோட்டையை மீட்பது என்று சுல்தான் ஸலாஹுத்தீன் யோசித்தார். முற்றுகையைத் தாம் சமாளித்துக்கொண்டிருக்கும்போது எப்படியும் வேறொரு பெரிய படை பாலஸ்தீனுக்குள் நுழையப்பார்க்கும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஒற்றர்கள் மூலம் அந்தப் படையின் பலம் குறித்துத் தகவல் சேகரித்து அறிய விரும்பியவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
பாலஸ்தீனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த படையை வழிநடத்தி வந்தவர், ஜெர்மானிய சக்கரவர்த்தி பிரடரிக் பார்பரோஸாவேதான்! ஆகவே, நிலைமை கைமீறிப் போய்விடக்கூடாதே என்று கவலைப்பட்ட சலாவுதீன் உதவிக்கு வரமுடியுமா என்று கேட்டு மொராக்கோவுக்குத் தூது அனுப்பினார். அங்கே அப்போது ஆண்டுகொண்டிருந்தவர் ஒரு முஸ்லிம் குறுநில மன்னர்.
பக்கத்தில்தான் இருக்கிறது பாக்தாத். (ஈராக்கின் தலைநகர்.) கலீஃபா என்று ஒருவர் அங்கு இருக்கவே இருக்கிறார். பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் வாழும் நாடுகளெல்லாம் அவரது கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது. ஆனாலும் ஏனோ தமக்குச் சம்பந்தமில்லாமல் யாரோ யாருடனோ மோதும் யுத்தம் என்பது போலத்தான் அப்போது அவர் இருந்தார். சலாவுதீனுக்கு இதில் வருத்தம் உண்டு என்றாலும் சொந்தச் சண்டைகளைப் பேசிக்கொண்டிருக்க சமயமில்லை என்பதால் உதவக்கூடியவர் என்று நம்பியே மொராக்கோ சுல்தானுக்குத் தூது அனுப்பினார்.
துரதிருஷ்டவசமாக அவர் எதிர்பார்த்த உதவி எதுவும் அங்கிருந்தும் வரவில்லை. ஆகவே, தனியொரு நபராகத் தாமே முடிவெடுத்துச் செய்யவேண்டிய யுத்தம் இது என்று முடிவு செய்தார்.
சிலுவைப்போர் சரித்திரத்திலேயே இது ஒரு வினோதம்தான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் கலீஃபாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் ஒரு குறுநில மன்னருடன் ஐரோப்பிய தேசங்கள் மோதிய யுத்தம்.
ஸலாஹுத்தீனுக்கு அப்படியன்றும் அதிர்ஷ்டம் முற்றிலுமாகக் காலை வாரிவிடவில்லை. யாருமே எதிர்பாராவிதமாக பாலஸ்தீனை நெருங்கும் வேளையில் ஜெர்மானிய மன்னர் பிரடரிக் ஓர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதனால் நிலைகுலைந்த ஜெர்மானியப்படை கொஞ்சம் சிதறிப்போனது. அவர்களை மீட்டு ஒருங்கிணைத்து மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக ஹென்றி என்கிற மாவீரர் ஒருவர் தலைமையில் இன்னொரு பெரிய படையை போப் அனுப்பிவைத்தார்.
கி.பி. 1190-ம் ஆண்டு ஜூலை மாதம் யுத்தம் ஆரம்பமானது. சுமார் ஒரு வருட காலத்துக்கு எந்தத் தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் நீடித்துக்கொண்டே போன யுத்தம் அது. சலிப்புற்றாவது போரை நிறுத்துவார்களா என்று உலகம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஸலாஹுத்தீனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆகவே, வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாமல் ஓர் இடைக்கால ஏற்பாடு போல போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் போர் நிறுத்தக் காலத்தை சிலுவைப்போர் வீரர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்த ஆள்பலம் மற்றும் பொருள்பலத்தைச் சரியாகப் பங்கிட்டு முற்றுகை நடந்துகொண்டிருந்த கோட்டைகளுக்கு அனுப்பிவைத்தார்கள். கப்பலில் வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மன்னர்கள். இந்த இருவருமே வந்து சேர்ந்த கணத்திலிருந்தே காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன், ஐயோ பாவம், மன்னர்களுக்குக் காய்ச்சல் வந்தால் வீரர்கள் சோர்வடைந்துவிடுவார்களே என்று பிரசித்தி பெற்ற லெபனான் நாட்டு மருந்துகளையும் சுரவேகத்தைத் தணிக்கக் கூடிய மூலிகை வேர்களிலிருந்து பிழியப்பட்ட சாறுகளையும் அன்பளிப்பாக அனுப்பிவைத்தாராம்!
அந்த இரு மன்னர்களும் உடல்நலம் தேறியபிறகு மீண்டும் முற்றுகை யுத்தம் ஆரம்பமானது. ஆனால் முஸ்லிம் வீரர்கள் இம்முறை மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்கள். ஸலாஹுத்தீன் யோசித்தார். தமது வீரர்கள் எவரும் வீணாக உயிரிழப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரையும் கொல்லமாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் ஏக்ர் கோட்டையை விட்டுத்தந்துவிடுவதாகச் சொன்னார்.
அந்த இரு மன்னர்களும் உடல்நலம் தேறியபிறகு மீண்டும் முற்றுகை யுத்தம் ஆரம்பமானது. ஆனால் முஸ்லிம் வீரர்கள் இம்முறை மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்கள். ஸலாஹுத்தீன் யோசித்தார். தமது வீரர்கள் எவரும் வீணாக உயிரிழப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆகவே, ஒருவரையும் கொல்லமாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் ஏக்ர் கோட்டையை விட்டுத்தந்துவிடுவதாகச் சொன்னார்.
சிலுவைப்போர் வீரர்கள் சம்மதித்தார்கள். கோட்டை கிறிஸ்துவர்களின் வசமானது. அதன்பிறகு நடந்ததுதான் துரதிருஷ்டவசமானது. மன்னர் ஸலாஹுத்தீன் எத்தனை மனிதாபிமானமுடன் கிறிஸ்துவர்களை நடத்தினார் என்பதைச் சற்றும் நினைவுகூர்ந்து பாராமல், கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கோட்டை கைவசமானதுமே அத்தனை முஸ்லிம் வீரர்களையும் கிறிஸ்துவர்கள் நிற்கவைத்துத் தலையைச் சீவினார்கள்! (வெண்ணிறமானதொரு பெரிய மைதானம் முழுவதும் ரத்தம் படிந்து செம்மண் நிலம் போலானது என்று இதனை எழுதுகிறார் சரித்திர ஆசிரியர் மிஷாட்.)
யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது என்றாலும் நம்பமுடியாததொரு திருப்பமாகக் குறிப்பிடவேண்டிய விஷயம், இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்டின் மனமாற்றம். ஸலாஹுத்தீன் இத்தனை அன்பானவராக, மனிதாபிமானம் உள்ளவராக இருப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடன் போரிடுவதற்கு மன்னருக்குச் சங்கடமாக இருந்தது. ஏதாவது செய்து யுத்தத்தைத் தவிர்க்க முடிந்தால் எத்தனையோ சிறப்பாக இருக்குமே என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அரசியலில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்களும் இதற்குக் காரணம் என்று தெரிகிறது. ரிச்சர்ட், நாடு திரும்ப எண்ணினார். போவதற்கு முன்னால் போரை நிறுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்று அவர் பார்த்தார்.
ஆகவே, ஸலாஹுத்தீனின் தம்பியான ஷைஃபுத்தீனைச் சந்தித்துத் தம் அமைதி நாட்டத்தைத் தெரியப்படுத்தினார். அது எந்த மாதிரியான அமைதி ஒப்பந்தம், அதில் இடம்பெற்றிருந்த ஷரத்துகள் என்னென்ன என்பது பற்றிய முழு விவரங்கள் இன்று கிடைப்பதில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மிகவும் சுவாரசியமானது.
ரிச்சர்டுக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் ஒரு விதவை. அந்த விதவைச் சகோதரியை சைபுதீன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து மன்னரின் சகோதரியை சுல்தான் ஸலாஹுத்தீனின் சகோதரர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் முஸ்லிம் கிறிஸ்துவர்களிடையே போர் நிறுத்தம் ஏற்படுவது ஓரளவு சுலபமாகும். (அதாவது சிலுவைப்போரிலிருந்து இங்கிலாந்து மட்டுமாவது வெளியேறும்.) திருமணம் ஆனதும் ஜெருசலேமை ஷைஃபுத்தீனும் மன்னரின் சகோதரியும் இணைந்து ஆட்சி செய்யலாம்.
இந்த ஒப்பந்தம் மட்டும் நடைமுறைக்கு வந்திருக்குமானால் சிலுவைப்போர்கள் அன்றைய தினத்துடனேயே கூட முற்றுப்பெற்றிருக்கும் என்று அங்கலாய்க்கிறார்கள் அனைத்து சரித்திர ஆசிரியர்களும். இது புரட்சிகரமான திட்டம் மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனையும் கூட. இரு பெரும் சமூகத்தினரிடையே மூண்டிருந்த பகைமையை நிச்சயம் தணித்திருக்கக் கூடும்.
ஆனால், கிறிஸ்துவ மத குருமார்கள் ஒட்டுமொத்தமாக இதனை அன்று எதிர்த்துவிட்டார்கள். மன்னர் ரிச்சர்டுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே பேசத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால் மனம் சோர்ந்திருந்த ரிச்சர்ட், வேறு புதிய பிரச்னைகள் வேண்டாம் என்று கடைசி நிமிடத்தில் மனம் மாறியிருக்கலாம். குருமார்களை சந்தோஷப்படுத்துவதை மட்டுமே தமது அப்போதைய நோக்கமாக வைத்துக்கொண்டு வேண்டாவெறுப்பாக ஜெருசலேம் மீது படையெடுப்பைத் தொடங்கினார்.
சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு இங்கிலாந்து மன்னரின் மனநிலை புரிந்தது. அவரது சூழ்நிலையும் புரிந்தது. ஆகவே, மிகவும் ‘பரிவுடன்’ யுத்தத்துக்கு ஒத்துழைத்தார்! ‘நீங்கள் வேறு வழியில்லாமல் ஜெருசலேம் மீது படை எடுக்கிறீர்கள். நானும் வேறு வழியில்லாமல் உங்களை எதிர்க்கிறேன்’ என்று சொன்னாராம் ஸலாஹுத்தீன்!
அந்தப் போரில் ரிச்சர்டால் ஜெருசலேத்தை வெல்ல முடியவில்லை. சுல்தானின் வீரர்கள் இரும்புச் சுவர்கள் போல நகரைச் சுற்றி அணிவகுத்து ஒரு கிறிஸ்துவப் போராளியும் முன்னேற முடியாமல் தடுத்து யுத்தம் புரிந்தார்கள். தோல்விதான் என்று ரிச்சர்டுக்குப் புரிந்துபோனது. வீணாக நாட்களைக் கடத்தவேண்டாம் என்று முடிவு செய்தவராக, அவர் சலாவுதீனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
"உங்கள் அன்பையும் நட்பையும் மிகவும் மதிக்கிறேன். உங்களுடைய இந்த நிலத்தில் ஆட்சிபுரிய நான் விரும்பவில்லை. இதுவரை நான் வென்ற பகுதிகளை என் சகோதரி மகனான ஹென்றிக்கு அளித்து விடுகிறேன். அவன் உங்களுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி புரிவான். அப்படித்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்திவிட்டே செல்கிறேன். ஆனால் ஜெருசலேத்தை மட்டும் நீங்கள் எனக்கு அளித்துவிடவேண்டுமென்று வேண்டுகிறேன்."
ஸலாஹுத்தீன் புன்னகையுடன் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். நட்பு தொடரும். ஆனால் ஜெருசலேம் கிடையாது!
மூன்றாவது சிலுவைப்போர் இப்படியாக ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ஜெர்மானிய சக்கரவர்த்தியின் துர்மரணம், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிர்த்தியாகம், ஏகப்பட்ட நோய்க்கிருமிகள் பரவியது, இங்கிலாந்து மன்னரின் மனமாற்றம், நிறைவேறாத ஓர் அமைதி ஒப்பந்தம் ஆகியவை இந்தப் போரின் எச்சங்கள்.
சிரியாவின் ஏக்ர் என்னும் ஒரு சிறு நகரின் கோட்டையை வெற்றி கொண்டது மட்டுமே இந்தப் போரில் கிறிஸ்துவர்கள் அடைந்த லாபம்.
மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் ஸலாஹுத்தீன் நெடுநாள் உயிர்வாழவில்லை. யுத்தத்தின்போது ஏற்கெனவே அவருக்கு விஷக்காய்ச்சல் கண்டிருந்தது. ஒருமாதிரி மனோபலத்தில் தாக்குப்பிடித்து யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றிருந்தார். தாம் அதிகநாள் உயிர்வாழ மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. ஜெருசலேம் சிம்மாசனத்தில் அந்த முறை அமர்ந்த நாளாக ஊரில் ஏராளமான கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்ட ஆரம்பித்தார்.
வழிபாட்டிடங்கள் அவசியம்தான். ஆனால் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லவை என்று சொல்லியிருக்கிறார் ஸலாஹுத்தீன். யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம். ஸலாஹுத்தீன் அந்த வெற்றிக்குப் பின் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார். இந்த வகையிலும் அவர் மற்ற கலீஃபாக்கள், சுல்தான்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவராகவே இருந்திருக்கிறார்!
கொஞ்சநாள் ஓய்வெடுக்கலாம் என்று ஜெருசலேத்திலிருந்து புறப்பட்டு சிரியாவில் உள்ள டெமஸ்கஸுக்குப் (அந்நாளில் திமஷ்க்.) போனவர், அங்கேயே கி.பி. 1193-ம் ஆண்டு உயிர்நீத்தார். வயதொன்றும் அதிகமில்லை. ஐம்பத்தாறுதான்.
ஸலாஹுத்தீனின் மரணம் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் நிலைகுலையச் செய்தது என்று பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இதில் மிகை ஏதுமில்லை. ஏனெனில், அன்றைய தேதியில் சிலுவைப்போர் வீரர்களுக்கு சவால் விடக்கூடிய வல்லமை பொருந்தியவராக அவர் ஒருவர்தான் இருந்தார். அச்சமூட்டுவதற்காகவே லட்சக்கணக்கான வீரர்களை ஐரோப்பாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள் அப்போது. அந்தப் பெரும்படைகளைக் கண்டு மிரளாமல் எதிர்த்து நின்றவர் ஸலாஹுத்தீன்.
போர்க்கள வீரம் மட்டுமல்ல காரணம். தனிவாழ்விலும் அப்பழுக்கற்ற சுல்தானாக அவர் இருந்திருக்கிறார். சுல்தான் இறந்தபிறகு அவரது சொத்து விவரங்களை ஆராய்வதற்காக ஓர் அரசுக்குழுவை நியமித்திருந்தார்கள். மன்னரின் தனிப்பட்ட வரவு செலவுக் கணக்குகள், அவர் தம் பெயரிலும் தமது உறவினர்கள் பெயரிலும் என்னென்ன அசையாச் சொத்துகள் வைத்திருக்கிறார் போன்ற தகவல்களைச் சேகரிக்கச் சென்ற அந்தக் குழு வியப்பில் மூர்ச்சையாகிப் போனது.
காரணம், எத்தனை தேடியும் மன்னரின் சொத்தாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது ஒரே ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் மட்டுமே. நமது மொழியில் புரியும்படி சொல்லுவதென்றால் ஒரு ரூபாய் அறுபது காசு. இதில் மிகையே இல்லை. தமக்கென்று ஒரு பைசா கூட கடைசிவரை சேர்த்து வைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார் ஸலாஹுத்தீன்! அவரது மனைவி உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு இது விஷயமாக வருத்தம் இருந்திருக்குமோ என்னவோ, ஆட்சி அதிகாரத்தை மேலாடையாகக் கூட இல்லை; ஒரு கைக்குட்டை மாதிரிதான் வைத்திருந்தார் அவர்.
ஸலாஹுத்தீனின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்லப்படுவது, எகிப்துக்கு அவர் ஓர் அரசியல் முக்கியத்துவம் பெற்றுத் தந்ததைத்தான். மத்திய ஆசியாவின் எத்தனையோ பகுதிகள் அந்நியப் படையெடுப்புகளாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் சிதறுண்டுபோன காலகட்டத்தில் சிதறிக்கிடந்த எகிப்தை சில்லறை சேர்ப்பதுபோல ஒன்று சேர்த்து, ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, மத்தியக் கிழக்கின் மிக முக்கியமான முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்களுள் ஒன்றென அதற்கொரு தனியடையாளம் பெற்றுத்தந்தவர் ஸலாஹுத்தீன்.. பாலஸ்தீன், சிரியா வரை அந்த ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரித்து, வலுவான பாதுகாப்பு அரணாகத் தாமே முன்னின்று காத்தவர் அவர். தவிர, பாக்தாத் கலீஃபாவின் அரசுடன் எகிப்துக்கு நிரந்தரமான, நீடித்த நல்லுறவு ஏற்படவும் காரணமாக இருந்தவர்.

பா. ராகவன்
போரியல் மேதை ஸலாஹுத்தீன் அய்யூபி போரியல் மேதை ஸலாஹுத்தீன் அய்யூபி Reviewed by நமதூர் செய்திகள் on 03:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.