ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மௌலானா முகம்மது அலி


1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி - க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :
காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!
என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.
1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது.
மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :
என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள்
லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் 'அல்-அக்ஸா' பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :
இறைவா...
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !
சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !
மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான 'சுதந்திர இந்தியா' மலர்ந்து விட்டது. ஆனால் தேசத்தின்விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை - தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது. எனவே மௌலானா கேட்ட ''சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா'' ! என்ற பிரார்த்தனை... மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இன்று சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் பிரார்த்தனையும் - ஜீவத் துடிப்பும் :
எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாய் திகழ வேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்
அதோடு இந்த மண்ணில்
இஸ்லாமியர் அமைதியாக வாழவிடப்பட வேண்டும் ... என்பதே !
-Freedom Movement in India- The Role of Ali Brothres, P.23
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மௌலானா முகம்மது அலி ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய  மௌலானா முகம்மது அலி Reviewed by நமதூர் செய்திகள் on 03:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.