குற்றவாளிகளுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்: எம்.எல்.ஏ நாஜிம்

காரைக்கால்: கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக, நான் போதும் பேசியதில்லை, பேசவும் மாட்டேன் என காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ நாஜிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ நாஜிம் கூறியதாவது:
"காரைக்காலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி டைம்ஸ் நவ் என்ற தனியார் தொலைகாட்சியில் நான் கொடுத்த பேட்டியை சிலர் திட்டமிட்டு திரித்து அருவருப்பான அரசியல் நடத்தி கொண்டிருக்கின்றனர். எனது தொகுதியில் அதுவும் நான் வசிக்கின்ற வீதியில் நள்ளிரவில் நடந்துள்ள இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன், எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், இது விபச்சாரம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள்.
இது தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உண்மைகள் வெளிவரும் என்றும், உண்மையான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றத்தின் பின்ணணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புவதாகவும், நீதி நிலைநாட்டப்படுவதற்கு எனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்குவேன் என நான் தனியார் டிவி-யில் பேட்டியாக கூறியிருந்தேன். இந்த பேட்டி மிக தெளிவாக இருந்தும், நடந்தது பாலியல் வன்கொடுமை அல்ல, விபச்சாரம் தான் என்று நான் கருத்து கூறியதாக எனது வார்த்தைக்கு பொய்யான அர்த்தம் கற்பித்து அந்த தனியார் தொலைகாட்சி விஷமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பொய்யான செய்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் திட்டமிட்டு திரித்து அருவருப்பான அரசியல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காவும், அவர்கள் மேம்பாட்டுக்காவும் நான் ஆற்றிவரும் பணியை மக்கள் நன்கு அறிவார்கள். ஏன், எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களும் அறிவார்கள். பொதுவாக கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக நான் ஒரு போதும் பேசியதில்லை. பேசவும் மாட்டேன். சிபாரிசும் செய்யமாட்டேன் என்பது காவல்துறை நண்பர்களுக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்க, அந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவரை விட்டுவிடுங்கள் என காவல்துறையினரிடம் நான் சிபாரிசு செய்ததாக கூறுவது என் கற்பனையில் கூட தோன்றாத விஷயம். ஆதாரமற்ற குற்றசாட்டுகளையும், பொய்யான வதந்திகளையும், வஞ்சகர்களின் வேஷத்தையும் எனது பாசத்திற்குரிய மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு புறக்கணிபார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை" என்றார்.
குற்றவாளிகளுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்: எம்.எல்.ஏ நாஜிம் குற்றவாளிகளுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்: எம்.எல்.ஏ நாஜிம் Reviewed by நமதூர் செய்திகள் on 20:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.