மோடியின் ச(ந்த)ர்ப்பவாதம் - மல்லி!

06.05.2005 - பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான அருண் ஜேட்லி, அமெரிக்கத் தூதரக அதிகாரியான ராபர்ட் பிளேக்கோடு பேசிக் கொண்டிருக்கிறார். மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளதைப் பற்றி பேசும்போது, ஜேட்லி ”இந்து தேசியவாதம் என்பது சந்தர்ப்பவாதமே” என தெரிவித்தார்.
இந்த விசயம் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலத்திற்கு வந்தது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வர் பாரதிய ஜனதாக் கட்சியினர் என்பதைத்தான் அந்த வார்த்தைகளில் தெளிவுபடுத்துகிறார் ஜேட்லி. "அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தினை நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்தாலும், ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்திட மாட்டோம்" என அத்வானி, பீட்டர் பர்லேக் என்ற அமெரிக்க அதிகாரியிடம் 13.05.2009 அன்று தெரிவித்த விசயமும் பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தினை அம்பலப்படுத்தும் மற்றொரு சான்றாகும்.

காந்திஜியைக் கொன்ற கோட்சே, தனது கையில் ”இஸ்மாயில்” என்ற பெயரைக்குத்திக் கொண்டு சென்றதை மறந்து விட முடியுமா? பாபர் மசூதியினை இடித்துத் தள்ளும்போது இன்பத்துடன் பார்த்து குதூகலித்து விட்டு, பின்னர் விசாரணையிலிருந்து தப்பிக்க போலிக் கண்ணீர் வடித்த அத்வானியை மறக்க முடியுமா? ஹிந்துத்வா தலைவர்களுக்கு இவ்வாறு இரட்டை வேடம் போடுவது கை வந்த கலை.

அவர்கள் வரிசையில் தம்மையும் இணைத்துக்கொள்ள இப்போது போட்டியிடுபவர் மோடி.  குஜராத் கலவரத்தைத் தலைமையேற்று நடத்தியபோது தீவிர ஹிந்துத்துவ ஹீரோவாக தம்மை அடையாளப்படுத்தி அதன் மூலம் தேசிய அரசியலுக்கு வந்தவர், குஜராத் கலவரம் நடைபெற்று ஏறத்தாழ 12 ஆண்டுகளாக எவ்வித குற்ற உணர்வுமில்லாமல் நடந்துக் கொண்டு, வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக நீலிக்கண்ணீர் வடித்து போலி வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்!

கரன் தாபருடன் நேர்காணலி்ன் போது கலவரத்திற்காக வருத்தப்படாதவர், அகதிகள் முகாம்களை முஸ்லிம்கள் பிள்ளை பெறும் இடங்கள் என கொச்சைப்படுத்தியவர், ஹம் பாஞ்ச், ஹமாரா பச்சீஸ் என முஸ்லிம்களை இழிவுபடுத்தியவர் (http://inneram.com/thoughts/english/4453-should-we-run-relief-camps-open-child-producing-centres.html) பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் நெருங்கியதும் கலவரத்தினை எண்ணி வருந்துகிறாராம்... கலவரம் நடந்து 7 மாதங்களுக்குள் ”கௌரவ் யாத்திரை” நடத்தி புளகாங்கிதம் அடைந்தவர்தான் இந்த புண்ணியவான்!

மற்ற அரசியல்வாதிகள் போல் மோடி இல்லை, அவர் தனிப்பட்டவர், சிறந்தவர் என பொய்களை அவிழ்த்து விடும் அவரது ரசிகர்களுக்குத் தாமும் ஒரு ”கடைந்தெடுத்த அரசியல்வாதிதான்” என்பதை உணர்த்தியதற்காக மட்டும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸால் முன் நிறுத்தப்பட்ட "ஹிந்துத்துவா ஹீரோ"வும் கடைசியில் முஸ்லிம்களின் கால்களில் ஓட்டுக்காக விழுந்துவிட்ட பரிதாபம்!

தாமரை இலை தண்ணீர் போல "சத்தியத்துடன் பொருந்தி போக முடியாததால்தான்" சிம்பாலிக்காக இவர்கள் தாமரையைச் சின்னமாக தேர்ந்தெடுத்தார்களோ?!

மல்லி
மோடியின் ச(ந்த)ர்ப்பவாதம் - மல்லி! மோடியின் ச(ந்த)ர்ப்பவாதம் - மல்லி! Reviewed by நமதூர் செய்திகள் on 20:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.