உண்மை தெரியாமல் அன்று பொங்கியவர்கள் இன்று எங்கே!

பல்வேறு நேரங்களில் பல நல்ல காரணங்களுக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கொடிய தொற்று நோய் நாட்டில் பரவுவதை விட புரளிகளையும் பொய்யான தகவல்களையும் வேகமாக பரவச் செய்யவும் அது உதவுகிறது. இதனால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லி காவல்துறையின் தலைமை காவலர் சலீம்.


40 வயதான சலீம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடி போதையில் டில்லி மெட்ரோவில் பயணித்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சலீம் நிலை தடுமாறி நிற்க கஷ்டப்படுகிறார். பின்னர் தரையில் விழுகிறார். இந்த வீடியோ ஒரே நாளில் இரண்டு லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதனையடுத்து இவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். தொலைகாட்சி சானல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அவர் தரப்பின் நியாயங்கள் எதையும் அறிய முற்படாமல் குடிபோதையில் காவல்துறை அதிகாரி, டெல்லி மெட்ரோ பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறதா என்று விவாதத்தில் குதித்தனர். அடுத்தடுத்து பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழவே இவரது மதிப்பு சரியத்தொடங்கியது. இவர் பணியில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இவரது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஆனால் உண்மையில் சலீம் அன்று குடிபோதையில் இருந்திருக்கவில்லை. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் பயங்கர பக்கவாதம் அவரை தாக்கி மூளைக்கு செல்லும் நரம்புகளை பாதித்து மூலையில் இரத்த கசிவு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது உடலின் இடப்புறம் பாதிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோவில் சலீம் காணப்பட்ட நிலையும் இந்த பாதிப்பினால் ஏற்பட்டதே.

 இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இதனை உறுதி செய்தது. மேலும் சலீமின் கண்ணியமிக்க பணி அவரை குற்றமற்றவர் என்றும் நிரூபித்தது. அவர் பணியில் மீண்டும் அமர்த்தப்பட்டார். அவரை இடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள் பணியில் இருந்த நாட்களாக கணக்கிடப்பட்டன.

ஆனால் இந்த சம்பவத்தால் தன் கண்ணியம் தாக்கப்பட்டதாக உணர்ந்த சலீம் உச்ச நீதி மன்றத்தின் உதவியை நாடியுள்ளார். அதில் டில்லி அரசு, காவல்துறை கமிஷனர், டில்லி மெட்ரோ ரயில் கார்பரேசன், இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவற்றிடம் முறையிட்டு தனது இழந்த கண்ணியத்தை மீட்டுத் தருமாறு முறையிட்டுள்ளார்.

இது குறித்து சலீமின் வழக்கறிஞர் கூறுகையில் “சலீமின் வீடியோ வைரலான போது செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியாயியான. ஆனால் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆன போது எந்த செய்தித்தாளும், தொலைகாட்சி சானலும் அந்த செய்தியை வெளியிடவில்லை, பொதுமக்களின் பார்வைக்கு அவர் இன்னும் குடித்துவிட்டு ரயிலில் பயணித்த காவலர் என்றும் இன்னும் பணி நீக்கத்தில் உள்ளவர் என்றுமே அறியப்படுகிறார்.”

தற்பொழுது சலீம் கேரளாவில் தனது சொந்த ஊரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இன்னும் அவருக்கு பேச்சு தடுமாற்றம் உள்ளது. சமூக வலைதளங்களின் ஊடக தீர்ப்பு குணத்தின் இருண்ட பக்கத்தையும் தங்கள் டி.ஆர்.பி. கூட வேண்டும் என்பதற்காக உண்மையை பற்றி சற்றும் கவலைப் படாத தொலைகாட்சி சானல்களையும் இந்த சம்பவம் தோலுரித்து காட்டிஉள்ளது.
உண்மை தெரியாமல் அன்று பொங்கியவர்கள் இன்று எங்கே! உண்மை தெரியாமல் அன்று பொங்கியவர்கள் இன்று எங்கே! Reviewed by நமதூர் செய்திகள் on 00:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.