மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் பிப். 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, முறையாக பூர்த்தி செய்து பிப். 28-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக, அதாவது 31.12.2012-ம் தேதிக்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2013-ம் தேதியில் 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராக இருக்க கூடாது.
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருக்க கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மேற்கண்ட தகுதியுடைய மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் பிப். 28-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை Reviewed by நமதூர் செய்திகள் on 19:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.