சிறுபான்மையினரை அவதூறாக பேசிய H. ராஜா உருவ பொம்மையை எரித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!


சிறுபான்மையினரை அவதூறாக பேசிய H. ராஜா உருவ பொம்மையை எரித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!


கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும், சமூக தலைவர்களையும் அவதூறாக விமர்சித்து தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (31-01-2014) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் T. ரத்தினம் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் துவக்க உரையாற்றி தொகுத்து வழங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், விடுதலை சிறுத்தை கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் சிபி சந்தர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜூனைத் அன்சாரி, திராவிட இயக்கத்தின் வழ. துரை அருண் மற்றும் பி.யு.சி.எல் அமைப்பின் ராகவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தனது உரையில் கூறும்போது, “தமிழகத்தில் நடந்த பல்வேறு மதக் கலவரங்கள், மோதல்கள் ஆகியவற்றின் பின்ணணியில் பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியின் மத துவேஷ பேச்சுக்கள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
அந்த வகையில் தற்போது வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குகளுக்காக சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே மத துவேஷத்தை தூண்டும் வகையில் பாஜக வின் ராஜா பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களையும், முஸ்லிம்களை பற்றியும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் அவர் பேசிய பேச்சுக்கள் மத துவேஷத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் சமூக நீதிக்கு வித்திட்ட தந்தை பெரியார் பற்றியும், அவரை தரக்குறைவாக பேசிய பேச்சுக்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சமூக நல்லிணக்கத்தை, பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது கணடிக்கத்தக்கது. ஆகவே காவல்துறை உடனடியாக மத துவேஷத்தை தூண்டிய பாஜகவின் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத்,பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராயல் கரீம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் முகம்மது சலீம், செயலாளர் ஷேக் முகம்மது, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முகம்மது பிலால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக தென் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் பல்லாவரம் அன்சாரி நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள்உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிறுபான்மையினரை அவதூறாக பேசிய H. ராஜா உருவ பொம்மையை எரித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்! சிறுபான்மையினரை அவதூறாக பேசிய H. ராஜா உருவ பொம்மையை எரித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 07:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.