இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு !

துபாயில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு துபாய் இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன்
துபாயில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களது இறுதிச் சடங்கினை பொங்கல் திருநாளான 14.01.2016 செவ்வாய்க்கிழமை துபாய் ஜெபல் அலி சுடுகாட்டில் நடத்தியது.
இதன் விபரமாவது : கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்த சேகர் தங்கராஜ் ( வயது சுமார் 35 ) கடந்த செபடம்பர் 1 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக துபை ராஷித் மருத்துவமனையில் இறந்து விட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவரைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்திய துணைத் தூதரகத்தின் உத்வியை நாடினர்.
இந்திய துணைத் தூதரகத்தினர் கேட்டுக் கொண்டதற்கினங்க துபை ஈமான் அமைப்பின் துணைச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் ஊடங்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்தனர். 24 மணி நேரத்தில் இவரைப் பற்றிய தகவல் கிடைத்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் இறுதிச் சடங்கினை துபையில் நடத்துவதற்கு அனுமதிக் கடிதம் குடும்பத்தினர் கொடுத்தன் பேரில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மற்றொருவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி தெய்வேந்திரன் ( வயது சுமார் 35 ). எதிர்பாராது இறந்துவிட்ட இவரது உடலை ஆறு மாதத்திற்கும் மேல் இவரது குடும்பத்தினருடன் சேர்க்க இயலவில்லை. இரண்டு திருமணம் செய்து கொண்டவர். இதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்க ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு துபையில் மேற்கொள்ள அனுமதிக் கடிதம் கொடுத்ததன் காரணமாக அவரது இறுதிச் சடங்கினையும் ஈமான் அமைப்பு இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் மேற்கொண்டது.
இந்திய துணைத் தூதரகத்தின் துணை கன்சல் மோகன், சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ், ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், சுனில் பர்வானி, முஹம்மது, நாசர், பிள்ளை, இறந்தவர்களின் உறவினர்கள் கதிர்வேல், ராமன், மாரிமுத்து ஆகியோர் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
இந்து மத சம்பிரதாயப்படி கோதாவரி பிரவீன் குமார் பூஜைகளை நிறைவேற்றி எரியூட்டப்பட்டனர்.
இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் எவ்வித செலவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இல்லாமல் இத்தகைய பணியினை ஈமான் அமைப்பு மேற்கொண்டது.
துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் ஃபுஜைராவில் தமிழர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹாவை 050 467 43 99 எனும் அலைபேசியில் அணுகலாம்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இத்தகைய மனிதாபிமான சேவையினை இந்திய துணைத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் மோகன் பாராட்டினார். மேலும் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாகக் கூறினார்.
முதுவை ஹிதாயத்
செயலாளர் - மக்கள் தொடர்பு & ஊடகத்துறை
ஈமான்
இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு ! இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு ! Reviewed by நமதூர் செய்திகள் on 19:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.