அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

அரசு மருத்துவமனைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் சமச்சீர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 18 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 76 லட்சத்திலான கண் பரிசோதனைக் கருவிகள் மற்றும் அல்ட்ரா சோனோகிராம் ஸ்கேன் கருவிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய ஆட்சியர் மேலும் பேசியது:
சுகாதாரத் துறையில் பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கேன் கருவிகள் இல்லாத வி.களத்தூர், அனுக்கூர், நெய்க்குப்பை, பாடாலூர், மேலமாத்தூர், அடைக்கம்பட்டி, குன்னம், முருக்கன்குடி, மருவத்தூர் மற்றும் அத்தியூர் உள்ளிட்ட 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா ரூ. 4 லட்சம் வீதம், ரூ. 40 லட்சம் மதிப்பிலான கருவிகளும், செட்டிக்குளம், வேப்பூர், குன்னம், துங்கபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், வாலிகண்டபுரம், காரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் என 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கும் தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ. 36 லட்சம் மதிப்பிலான கண் பரிசோதனைக்கான கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சகுந்தலா கோவிந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), ஜெயலெட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை), வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஐ. ரவீந்திரன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் Reviewed by நமதூர் செய்திகள் on 19:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.