வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற பிப். 28 ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவராக, அதாவது 31.12.2008-க்கு முன் பதிவு செய்தவராகவும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 ஆம் தேதியில் 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக  இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். சுய தொழில் மற்றும் சம்பாத்தியம் செய்பவராக இருக்கக் கூடாது.
இத்தகுதியுடைய மனுதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப். 28 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாள்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம் என்றார் அவர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.